Thursday 26 December 2013

கடவுள் விட்ட வழி

பள்ளிக்கூடத்தில் ஏழாம்  வகுப்பு ‘பி’ பிரிவு. புகைப்படத்தில் முழங்கை வரை தொங்கும் தொளதொளா  சட்டையும், முழங்காலுக்கு கீழேயும் நீளும் அரை டிராயருமாய்க் காட்சியளிக்கும் என்னுடைய காஸ்ட்யூம் டிசைனர் எங்கள் ஊர் டெய்லர்தான்.

எனது வகுப்பறையில்  ஏனைய  மாணவர்கள் கச்சிதமாக உடம்போடு பொருந்தும் சட்டை டிராயருடன் காட்சியளித்தபோது  என்னை மட்டும் ஒரு கேலிச்சித்திரமாக ஆக்கிவிட்டிருந்தார் எங்கள் ஆஸ்தான டெய்லர்.

அப்பாவே ஒருமுறை தாங்கிக் கொள்ள முடியாமல் கேட்டே விட்டார்.

“ரொம்ப லூசா தச்சிட்டீங்க போலிருக்கே!”

“வளர்ற பையன் தானே சார்!”

'என்னது! அந்த சட்டை டிராயரை நான் வளர்ந்து பெரியவன் ஆனபிறகும் போட்டுக் கொள்ள வேண்டுமா என்ன!' எனக்கு கோபம் கோபமாக வந்தது!

டெய்லரின் சுபாவம் விசித்திரமாக இருக்கும். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது  என்று பார்க்க விரும்பாததுபோல் குனிந்து தைத்துக் கொண்டே இருப்பார்!

தெரு வழியே சர்க்கஸ் வண்டி போகும். கல்யாண ஊர்வலம் போகும். பட்டாசு அதிரும். தாரைத் தப்பட்டையுமாய் இறுதி ஊர்வலமும் போகும். ம்கூம்! டெய்லர் நிமிர்ந்தே பார்க்க மாட்டார்!

சாயங்கால வேளை களில் அவர் மனைவியும், பெண்களும் தட்டு நிறைய காராசேவு வாங்கி வைத்துக் கொண்டு கூஜா நிறைய காபி வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள்.

அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி விட்டது. எனக்கு ஒரு வகையில் சந்தோஷம். அப்பாடா! இந்த டெய்லரிடமிருந்து விடுதலை!

ஒரு வகையில் வருத்தம். குனிந்தபடி தைக்கும் அந்த டெய்லரையும், காரா சேவு சாப்பிடும் அவர் பெண்களையும் காலம் என்ன செய்திருக்கும்?

- கோபாலி
'கிழக்கு வாசல் உதயம்' ஆகஸ்ட் 2013 இதழில்.

No comments:

Post a Comment