அது மதியப்பொழுது. என் நண்பர் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன். அவரின் எதிர் வீட்டு முன்பாக ஒரு மாதிரியான ஆட்கள் சிலர் கூடி நின்று கன்னாபின்னாவென்று கத்திக் கொண்டிருந்தனர். வாசலில் ஒருவர் திட்டிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தபடி எந்த வித சலனமும் இல்லாமல், எதுவுமே அமைதியாக நின்றுகொண்டிருந்தார்.
"நீ என்ன பெரிய இவனா? யாரு என்ன பண்ணா உனக்கென்னய்யா? நீ என்ன போலிசா? இல்ல, ஊருக்கே நாட்டாமையா? செல் போன் இருந்தா யாருக்கு வேணுன்னாலும் போன் பண்ணி கம்ப்ளைண்ட் பண்ணிடுவியா? பண்ணிட்ட்டா, எங்கத் தலையைச் சீவிடுவானுங்களா?" கூட்டத்தில் நின்ற ஒருவன் கூப்பாடு போட்டான்.
இன்னொருவன், "இதோ பாருய்யா! வேலைக்குப் போனோமா, சம்பளம் வாங்குனோமா, குடும்பம் நடத்தினோமான்னு இருக்கணும். உனக்கு நல்லது. அதை விட்டுட்டு, அவன் அதைப் பண்றான், இவன் இதைச் செய்றான்னு கண்டவன்கிட்ட கொளுத்திப் போட்டுட்டேயிருந்த, ஒம்பாடு ரொம்ப திண்டாட்டமாயிடும். கேக்க நாதி இருக்காது. ஆமா!" என எச்சரிக்கைச் செய்தான்.
ஆளாளுக்கு திட்டிவிட்டு அவசர அவசரமாக கலைந்து போனார்கள். திட்டு வாங்கிய மனிதர் அப்படியென்ன தப்பு செய்தார் என்று வந்தவர்கள் பேசியதிலிருந்து ஒன்றுமே புரியவில்லை. என்னதான் இருந்தாலும், 'நம் பக்கத்துக்கு வீட்டுக்காரரை யார் யாரோ இப்படி சத்தம் போடுகிறார்களே!' என்று அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லையே என்று எனக்குள் கோபம் எழுந்தது.
நண்பன் வீட்டுக்கதவை சற்று வேகமாகவே தட்டினேன். கதவைத் திறந்தவனிடம், "என்னடா இது! வெளியே வந்து என்னன்னு கூட கேக்கமாட்டியா?" என்று ஆத்திரப்பட்டேன்.
"அதுவா! அந்தாளு ஒரு அக்கப்போருப்பா! அதான் இப்படி வாங்கிக் கட்டிக்கிறான்"
"அக்கப்போரா? என்னப்பா சொல்ற?"
"ஆமாம்ப்பா! கரண்ட் கட்டாயிடுச்சின்னா, ரோடு மோசமாயிடுச்சின்னா, டெலிபோன் செத்து போயிடுச்சின்னா, தண்ணி வரலைன்னா போதும். இந்த ஆளுக்கு மூக்கு வேர்த்துடும். உடனே, அந்தந்த டிபார்ட்மெண்ட் ஆளுங்க மேல அவங்க மேலதிகாரிங்களுக்கு ஒரு கம்ப்ளைன்ட்டை போட்டுடுவாரு. இந்தாளுக்கு இதான் வேலை.
இப்ப வந்து கத்திட்டுப் போறானுங்களே! அவனுங்க ரேஷன் பொருளையெல்லாம் பதுக்கி வச்சிருக்கானுங்கன்னு இந்தாளு போன் பண்ணி கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு. இவருதான் புகார் சொன்னதுன்னு அவனுங்களுக்கு தெரிஞ்சுபோச்சு. உடனே, எல்லாப் பொருளையும் பங்கிடு பண்ணிட்டு இவரையும் ஒரு வழி பண்ணிட்டு போறானுங்க.
இவருக்கு ஏன் இந்த வேலை? தான் உண்டு, தன வேலை உண்டுன்னு இருக்க வேண்டியதுதான்னு இருக்க வேண்டியதுதானே. இதுல நாம என்ன பண்ண முடியுங்கிற? சரி! அதை விடு! நீ முதல்ல வா!"
உயர்ப்படிப்பு படித்து உயர்ப்பதவியில் இருக்கும் என் நண்பன் சர்வசாதரணமாக சொன்ன அந்த விளக்கத்தைக் கேட்டு திகைத்துப்பொய் நின்றேன் நான்.
- உத்தமசோழன்
'கிழக்கு வாசல் உதயம்' ஜூலை 2013 இதழில்