Tuesday 30 April 2013

வாழ்க்கைப் பாடம்


திருச்சியில் செல்வசுந்தரி என்று எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார். என் மகளாகவே மாறி என் மீது அன்பைச் சொரிபவர்.

ஒருநாள், என்னைக் கைப்பேசியில் அழைத்தார். ஒரு இதழின் பெயரைச் சொல்லி, அதில் தன்னுடைய கதை வந்திருப்பதாகவும், அதைப் படித்து எப்படி இருக்கிறதென்று நான் சொல்வதைக் கேட்க ஆர்வமாய் இருப்பதாக சொன்னார்.

கதை வந்த இதழ், ஒரு நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை இணைப்பு. தகவல் சொன்னதோ, அன்று மாலைதான். நான் வாங்குவதோ, வேறொரு நாளிதழ். உடனே, பைக்கில் கடைக்குப் போனால், "தீந்துடுச்சு சார்!" என்றார்கள்.

எழுத்தாளர் மகளைக் கூப்பிட்டு, "பேப்பர் கிடைக்கலம்மா. என் நண்பர் ஒருத்தர் அதான் வாங்குறார். அவர்கிட்ட சொல்லி இருக்கேன். காலையில் கொண்டு வந்து தர்றதா சொல்லி இருக்கார். காலையில் படிச்ச உடனே கண்டிப்பா போன் பண்றேன்" என்றேன்.

றுநாள் இதழைக் கொண்டு வந்து தருகிறேன் என்று சொன்ன நண்பர் காலையில் என் வீட்டு வழியே பைக்கில் தென்பட்டார். நான் கேட்ட இதழைக் கொண்டு வருகிறார் என்று நினைத்து, அவசரமாக வாசலுக்கு வந்தால், அவர் நிற்காமலே நேரே போய்க் கொண்டேயிருந்தார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

அன்று மதியம் "படிச்சிட்டீங்களாப்பா?" என்று எழுத்தாளரிடமிருந்து ஆர்வம் பொங்கும் கேள்வி. "இன்னும் இல்லேம்மா! நண்பர்கிட்ட சொன்னேன்.தர்றேன்னு சொன்னவர் எதுவும் சொல்லாம, பாத்தும் பாக்காத மாதிரி போய்க்கிட்டே இருக்காரும்மா. இனி, அவர்கிட்ட கேக்கமாட்டேன். எப்படியாவது ஏஜென்ட்கிட்டேயிருந்து வாங்கியாவது படிச்சிட்டு சொல்றேம்மா."

"என்னப்பா நீங்க? நண்பர்ங்கிறீங்க! அப்புறம் ஏன் இதுக்குப் போய் அவர் மேல இப்படி கோபப்படுறீங்க? அவருக்கு என்ன வேலையோ, என்னமோ! எதுக்காகவும் யார் மேலேயும் நாம சடாருன்னு ஒரு முடிவுக்கு வந்துடக்கூடாதுப்பா. நானே ஒரு இதழை கொரியரில் அனுப்பி வைக்கிறேம்ப்பா!"

எனக்கு மேலும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

ன்று முன்னிரவு நேரம். நண்பர் அந்த இதழோடு வந்து நின்றார்.

"யாரோ வீட்டுக்கு வந்தவங்க அந்தப் புத்தகத்தை எடுத்துக்கிட்டு போயிட்டாங்க. அதை விசாரிச்சு தேடிப்பிடுச்சி வாங்கியாந்தேன். புத்தகத்தோடு வரணும்னுதான் உங்கக்கிட்ட காலையில ஏதும் பேசாம போயிட்டேன்." என்று சிரித்தார்.

எனக்கு கவலை கொஞ்சம் அதிகமாகி விட்டது.

'எப்போதுதான் வாழ்க்கைப் பாடத்தை நாம் சரியாகக் கற்றுகொள்ளப் போகிறோமோ, தெரிய வில்லையே!'

- கிழக்கு வாசல் மார்ச் இதழில்

Saturday 27 April 2013

எதற்காக பேசவேண்டும்?

மறைந்த எழுத்தாளர் நகுலனைப் பற்றி ஒரு சம்பவம்.
அவரைப் பார்க்க ஒரு நண்பர் வந்திருந்தார். இரண்டு பேரும் மணிக்கணக்கில் ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்திருந்தார்களாம்.
வந்தவர் புறப்பட்டார். வாசல் வரை வழியனுப்ப வந்த நகுலன் அவரைப் பார்த்து கடைசியாக வாய் திறந்து,"போறுமோல்லியோ?" என்று கேட்டாராம். அவரும், "போறும், போறும்!" என்று சொல்லி விட்டுப் போய்ச் சேர்ந்தாராம்.
எனக்கு அப்படி ஒரு நண்பர் இருக்கிறார். வயது 86. வீட்டுக்குள் அப்படி ஒரு நிசப்தம். அவரும், அவரது மகளும்தான் வசிக்கிறார்கள். மேஜை, கட்டில், இரண்டு நாற்காலிகள், சுவற்றில் ஒரு பழங்காலக் கடிகாரம். கடிகாரம் ஓடுகிறது.  ஆனால், காலம் நின்றுவிட்டது. பெரியவர் ஐம்பது வருட நினைவுகளில் கட்டிய சிலந்தியாய் வாழ்கிறார். எப்போதாவது என் போன்ற 'பூச்சிகள்' சிக்குவதுண்டு. பேசவே மாட்டார். மெல்ல ஒரு புன்னகை. அவரும் அவர் மகளும்கூட பேசிப் பார்த்ததில்லை. அவர் உடம்பு இஸ்திரி போட்ட மாதிரி தட்டையாக இருக்கும். தலையில் ஒரு காலத்தில் சாயம் பூசியிருப்பார் போலும். பாதி வெளுப்பு; பாதி பழுப்பு. அப்படியே நெருப்புப் பிடித்து எரிந்த தலையில் தண்ணீர் ஊற்றி அணைத்து மாதிரி இருக்கும். நல்ல வாய் நிறைய போடுவார். வெளியே போய்த் துப்பிவிட்டு வருவார். தண்ணீர் குடிப்பார். ஏதோ பேசப்போகிறார் என்று நினைத்தால், ஏமாற நேறும். மறுபடி அடுத்தச் 'சுற்று' வெற்றிலைப் புகையிலை யோகம்தான். வாய் முழுவதும் அடைபட்டதும், கண்வழி பேச முயற்சிப்பார். ஒரு பல்லி ஏதோ பேசும். மோவாயைத் தடவிக் கொள்வார்.
பேப்பர் வாசிப்பது இல்லை. கடைசியாக காந்தி சுடப்பட்டச் செய்தியை வாசித்த நாள் முதல் பேப்பர் வாசிப்பதை நிறுத்தி விட்டதாக ஒறுமுறை சொல்லி இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் வீட்டின் கதவு அடைக்கப்பட்டுவிட்டது. எப்போதாவது வருகிற நான், பால் பாக்கெட் போடுகிற பையன், வாசல் பெருக்கும் வேலைக்காரி, யாரோடும் பேசுதில்லை.
எதற்காக பேசவேண்டும்?
- கோபாலி, 'கிழக்கு வாசல் உதயம் மார்ச்' இதழில்