Wednesday 25 December 2013

யாருக்குச் சொந்தம்?

அன்று காலை எட்டு மணி இருக்கும். என் வீட்டு மாடி அறைக்கு ஒரு புத்தகம் தேடுவதற்காக படியேறினேன்.

இரண்டு மூன்று படிகள் ஏறுவதற்குள்ளாகவே மாடிப்படியோரம் நின்ற வளைந்த தென்னை மரத்தில் உட்காந்திருந்த காகம் ஒன்று, ஏதோ உயிர் போகிற மாதிரி “கா, கா!” என்று கத்தியது. உடனே அக்கம் பக்கத்து மரங்களில் உட்காந்திருந்த அதன் சாதி சனங்களான பல காகங்கள், ‘இதோ வந்துட்டேன், வந்துட்டேன்!’ என்பது போல் “கா, கா!” என்று கத்திக்கொண்டே தென்னை மட்டைகளிலும், மாமரக் கிளைகளிலும் அமர்வதும், பறப்பதுமாக என்னைச் சுற்றியே வட்டமடிக்கின்றன.

‘என்ன இது! நம்ம வீட்டு மாடியிலே நம்மையே ஏறக்கூடாது என்பது போல் கத்துதுங்களே!’ என்று எரிச்சலோடு ‘ச்சூ, ச்சூ!’ என்று மாடி அறைக்குள் நுழைந்தேன். காக்கைச் சத்தமும் ஓய்ந்தது.
அறைக்குள்ளிருந்து  வெளியே வந்ததும், மீண்டும் ‘கா, கா!’ என்ற கூச்சல். அதிலும் முதன் முதலாக கத்த ஆரம்பித்த காகம் தான் ‘எங்கடா இங்கே வந்தே!’ என்பது போல் விடாமல் கரைவதும், மேலே எழும்பி என் தலையை கொத்த வருவதுமாக பயமுறுத்தியது.

கீழே கிடந்த நீளமான குச்சி ஒன்றை எடுத்து ‘கிட்டே வந்தே, தொலைச்சிடுவேன்!’ என்று பயமுறுத்தினேன். ம்கூம்! அது பயப்படுவதாக தெரியவில்லை.

“இதோ பார்! இந்த வீடு, நான் கட்டியது. நீ உக்காந்து கத்துறியே, அது நான் வச்சு ஆளாக்கிய எனக்குச் சொந்தமான தென்னை. அதிலே உக்காந்துகிட்டு என்னையே வரக்கூடாதுன்னு ஆர்ப்பாட்டம் பண்றியா?” என்று மிரட்டினேன்.
அது மசிவதாக இல்லை. ‘கா, கா’ என்று என்னைப் பார்த்தவாறே பறந்து, பறந்து கத்தியது, அந்தப் பொல்லாத காகம்.

‘என்ன இது! புதுத் தொந்தரவா இருக்கே!’ என்று எரிச்சல்பட்டப்படியே கீழே இறங்கினேன்.

அப்போதுதான் என் இல்லத் தலைவி சொன்னார்.

“ஏங்க நம்ப மாடிப்படி தென்னையிலே காக்கா ஒண்ணு கூடு கட்டியிருக்குங்க. இனிமே அது குஞ்சு பொறிச்சு, அதுங்க பறக்குற வரைக்கும் யாரையும் அண்டவிடாதுங்க. பாத்து ஜாக்ரதையா போயிட்டு வாங்க!”

“அப்படியா! இந்த வீடு, மரம் எல்லாம் நம்மதுதான்னு நாம வச்சிருக்கிற பட்டா, சிட்டா, புக், இதெல்லாம இந்தக் காக்காக்கிட்டே செல்லாதா!”

“அதுகிட்டேதான் கேக்கணும்!” என் மனைவி சிரித்தார்.

இந்த வீடும், மரங்களும் உண்மையில் யாருக்குதான் சொந்தம்?

- 'கிழக்கு வாசல் உதயம்' ஆகஸ்ட் 2013 இதழில்

No comments:

Post a Comment