Saturday 26 January 2013

சேகுவேராவின் தோழன்

திருமண வரவேற்பு நிகழ்ச்சி அது! வந்தவர்கள் ஒருபுறம் பிடித்தமானவர்களோடு, சொந்த பந்தங்களோடு அமர்ந்து அரட்டையடித்துக்  கொண்டிருந்தனர். அதில், ஒரு இளைஞன் தன்னைச் சுற்றி நடந்த சில அநியாயங்களை எதிர்த்து நண்பர்களோடு சேர்ந்துப்  போராடியதையும், தொடர்ந்து வழக்கு, கோர்ட், விசாரணை என்று அலைந்ததையும் உணர்வு பொங்கச் சொல்லிக்கொண்டிருந்தான். அந்த இளைஞனின் உறவினரான சபாரிக்காரர் ஒருவர், முகம் சுளித்தபடி சொன்னார்.

"எப்போதுமே எனக்குச் சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் மூக்கை நுழைக்கிறது பிடிக்காது. நாம உண்டு... நம்ப குடும்பம் உண்டுன்னு வாழறதுதான் சரி..! தலையே போனாலும் அடுத்த வீட்டை எட்டிப் பாக்குறது சரி இல்லை..!"

அவர் அப்படி சொன்னது போலவே அச்சு பிசகாமல் வாழ்பவர். அது மட்டுமல்லாமல், அந்த இளைஞன் மீது அவருக்கு கடுங்கோபம் உண்டு.
"இன்னும் ஒரு சொந்த வீடு கட்டத் துப்பில்ல. தன் பிள்ளைய ஒரு நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்க வக்கில்ல. கடனுக்குக் கூட  ஒரு பைக் வாங்க வழியில்ல..! ஒரு ஓட்டை சைக்கிளில் 'லொடக்கு லொடக்கு'ன்னு போய்க்கிட்டு... இந்த ஊரைத் திருத்துற வேலை தேவையா..?" அவன் காதுபட முணுமுணுக்கிறார்.

அப்படி சொன்னவரும், அவரது மனைவியும் அரசுப் பணிகளில் இருக்கின்றனர். கைக்கொள்ளாத சம்பளம். வசதியான வாழ்க்கை. அவரது கழுத்து, கை, விரல்களில் 'தங்கங்கள்' மின்னிக் கொண்டிருந்தன. அவர் மனைவியின் உடம்பிலோச் சும்மக்க முடியாத அளவிற்கு.
திடீரென்று ஒரு நண்பர், சபாரிக்காரைப் பார்த்து, "என்ன சார் இது..? பேன்ட் முழுக்க முழங்காலுக்குக் கீழே ஏதோ புள்ளிப் புள்ளியாக் கரையா இருக்கு!"
"வேறென்ன..? சாக்கடைதான்..! நம்ப வீடு புறநகர்ப் பகுதியாச்சா! சந்து மாதிரி ஒரு சின்ன ரோடுதான் எங்க வீட்டுக்கெல்லாம் போகிற ஒரே வழி. ஆனா.. அந்த ரோட்டு முனைதான் கடைக்காரங்களுக்கேல்லாம் குப்பைக் கழிவுக் கொட்ற இடம். வீட்டுகாரங்களுக்கு சாக்கடை விடற இடம். எப்போதுமே சேரும்... சகதியுமாத்தான் இருக்கும். அதை கிராஸ் பண்றதே ஒரு பெரிய சவால்தான். அவசரமா பைக்ல வந்ததுல பட்டுடுச்சு. அது பாதையாச்சேன்னு எல்லாருக்கு தெரியாமலா இருக்கும்..? எப்படி பொய் கேக்குறது அவங்களை..? நமக்கெதுக்கு வம்பு..?"

தனது கையாலாகாத்தனத்தை இப்படி புலம்பி விட்டுச் சென்றார், அந்த சபாரி.
அந்த இளைஞன் நம்மிடம் சொன்னான். "மூணே  நாள்..! அந்தப் பாதை சுத்தமாகுதா இல்லையா பாருங்க..! நாளைக்கே முனிசிபல் ஆபீஸ் வாசல்லே நாங்க பொய் நிப்போம்."

நான் கேட்டேன். "ஏந்தம்பி..! பிரச்சினை அவங்களது..! போராட வேண்டியதும் அவங்கதானே..!"

"உங்களுக்குத் தெரியாதா சார்..! அநியாயத்தை எதிர்த்து வசதியானவங்களும்... பாதுகாப்பான நடுத்தர வர்க்கமும் ஒருநாளும் போராடமாட்டாங்க. இருப்பதை இழந்துட்டா என்ன பண்ணுறதுங்கிற பயம். இழப்பதற்கு எதுவுமே இல்லாத என்னை மாதிரி ஏழைதான் போராடுவான்..!"

இப்படித் தீர்மானமாகச் சொல்லிவிட்டு புறப்பட்டான், அந்த 'சேகுவேராவின் தோழன்!'

'அக்கிரமத்தையும்... அநியாயத்தையும் கண்டு யாரெல்லாம் கொதித்தேழுகிறார்களோ... அவர்களெல்லாம் என் தோழர்களே..!"

இப்படித்தானே  சொன்னான், சேகுவேரா!

கிழக்கு வாசல் உதயம்

கிழக்கு வாசல் உதயம் இதழைத் தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 'நம்மால் ஒரு இதழை தொடங்க முடியுமா..?' என்பதில் தொடங்கி, 'இதழை இன்னும் சிறப்பாக எப்படிச் செய்யலாம்..?' என்பதில் வந்து நிற்பதில் நிச்சயம் பெருமிதமாகவே இருக்கிறது.


கிழக்கு வாசல் இதழுக்கு ஒரு வலைத்தளம் தொடங்க வேண்டும் என்பது என் ஆசை! எனக்கு இரண்டு 'புத்திரப் பாக்கியங்கள்' இருக்கின்றன! 'செய்துடுவோம்ப்பா..!' இதுதான் வெகு ஆண்டுகளாய் அவர்களிடம் வந்து கொண்டிருந்த பதில்! கடைசியில், இந்த 'ப்ளாக்' அளவில் முன்னேறி இருக்கிறோம்.

இதழில் வந்த கட்டுரைகள் இங்கே பதிவேற்றப்பட்டுள்ளன! சுவைக்கவும்.
நன்றி!

கிழக்கு வாசல் இதழுக்குச் சந்தாதாரர் ஆகுவதற்கு முயற்சி செய்யவும். தொடர்புக்கு: உத்தமசோழன் - 9443343292