Saturday 27 April 2013

எதற்காக பேசவேண்டும்?

மறைந்த எழுத்தாளர் நகுலனைப் பற்றி ஒரு சம்பவம்.
அவரைப் பார்க்க ஒரு நண்பர் வந்திருந்தார். இரண்டு பேரும் மணிக்கணக்கில் ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்திருந்தார்களாம்.
வந்தவர் புறப்பட்டார். வாசல் வரை வழியனுப்ப வந்த நகுலன் அவரைப் பார்த்து கடைசியாக வாய் திறந்து,"போறுமோல்லியோ?" என்று கேட்டாராம். அவரும், "போறும், போறும்!" என்று சொல்லி விட்டுப் போய்ச் சேர்ந்தாராம்.
எனக்கு அப்படி ஒரு நண்பர் இருக்கிறார். வயது 86. வீட்டுக்குள் அப்படி ஒரு நிசப்தம். அவரும், அவரது மகளும்தான் வசிக்கிறார்கள். மேஜை, கட்டில், இரண்டு நாற்காலிகள், சுவற்றில் ஒரு பழங்காலக் கடிகாரம். கடிகாரம் ஓடுகிறது.  ஆனால், காலம் நின்றுவிட்டது. பெரியவர் ஐம்பது வருட நினைவுகளில் கட்டிய சிலந்தியாய் வாழ்கிறார். எப்போதாவது என் போன்ற 'பூச்சிகள்' சிக்குவதுண்டு. பேசவே மாட்டார். மெல்ல ஒரு புன்னகை. அவரும் அவர் மகளும்கூட பேசிப் பார்த்ததில்லை. அவர் உடம்பு இஸ்திரி போட்ட மாதிரி தட்டையாக இருக்கும். தலையில் ஒரு காலத்தில் சாயம் பூசியிருப்பார் போலும். பாதி வெளுப்பு; பாதி பழுப்பு. அப்படியே நெருப்புப் பிடித்து எரிந்த தலையில் தண்ணீர் ஊற்றி அணைத்து மாதிரி இருக்கும். நல்ல வாய் நிறைய போடுவார். வெளியே போய்த் துப்பிவிட்டு வருவார். தண்ணீர் குடிப்பார். ஏதோ பேசப்போகிறார் என்று நினைத்தால், ஏமாற நேறும். மறுபடி அடுத்தச் 'சுற்று' வெற்றிலைப் புகையிலை யோகம்தான். வாய் முழுவதும் அடைபட்டதும், கண்வழி பேச முயற்சிப்பார். ஒரு பல்லி ஏதோ பேசும். மோவாயைத் தடவிக் கொள்வார்.
பேப்பர் வாசிப்பது இல்லை. கடைசியாக காந்தி சுடப்பட்டச் செய்தியை வாசித்த நாள் முதல் பேப்பர் வாசிப்பதை நிறுத்தி விட்டதாக ஒறுமுறை சொல்லி இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் வீட்டின் கதவு அடைக்கப்பட்டுவிட்டது. எப்போதாவது வருகிற நான், பால் பாக்கெட் போடுகிற பையன், வாசல் பெருக்கும் வேலைக்காரி, யாரோடும் பேசுதில்லை.
எதற்காக பேசவேண்டும்?
- கோபாலி, 'கிழக்கு வாசல் உதயம் மார்ச்' இதழில்

No comments:

Post a Comment