Tuesday, 15 August 2017

இப்படியும் ஒரு மகனா!

இன்றைய இந்திய இளைஞர்களில் பெரும்பாலானவர்களின் விருப்பம் எது? அவர்களின் எதிர்காலக் கனவுகள் என்ன? ஆய்வு செய்தால்.. ஆய்வு எதற்கு? உள்ளங்கை நெல்லிக்கனி எனப் புலப்படும் உண்மை இதுதான்.
மருத்துவமோ, பொறியியலோ படிக்க வேண்டும். படித்தபின் பெரிய நிறுவனம் ஒன்றில் கை நிறைய ஊதியம் வாங்க வேண்டும். அதில் தவணைக்கு ஒரு மகிழுந்து, அதன்பின் ஒரு புதுவீடு. ஞாயிற்றுக்கிழமை இன்பச் சுற்றுலா, மது, மேற்படி.. மேற்படி, அதற்குப் பிறகு அழகான, தன்னைப்போல் கை நிறைய ஊதியம் பெறும் பெண்ணோடு திருமணம். பின்பு நிறுவனச் செலவில் வெளிநாட்டு பயணம். அதைப் பயன்படுத்தி வெளிநாட்டிலேயே வேலை, அங்கேயே குடியுரிமை பெற்றுத் தங்கிவிடவேண்டும்.
இவர்களைப் பெற்ற தாய் தந்தையர்களின் சிந்தனையும் மேலே சொன்னவற்றையேதான் சுற்றிச் சுழல்கிறது. மகனுக்கு ஒரு வேலை, வேலை கிடைத்தபின் திருமணம், பேரன், பேத்தி, மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி, அங்கு அவன் வாங்கும் சம்பளத்தின் பெருமை. அதன்பின் கவனிக்க ஆளின்றி முதியோர் இல்லம்.

பாரதி பாடியது போல் 'தேடிச் சோறு நிதம் தின்று, சின்னஞ் சிறுகதைகள் பேசி வாழ்க்கையைக் கழிக்கும் வேடிக்கை மனிதர்கள்'தான் இவர்கள். இதுதான் வாழ்வா? 'இல்லை' என வாழ்ந்து காட்டிய காணக் கிடைக்காத ஒரு மகனும், தந்தையும் இருந்தார்கள். அவர்கள் யார்?

இந்திய விடுதலை வரலாற்றில் தவிர்க்கவியலாத பெயர்கள் சந்திரசேகர ஆசாத், பகத்சிங் மற்றும் அவர்களுடைய புரட்சி இயக்கத் தோழர்கள். விடுதலைப் போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றதிலும், விடுதலை நாளை நெருங்கி வர வைத்ததிலும் இவர்களுக்குப் பெரும் பங்குண்டு. அந்த இளைஞர் திருக்கூட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒருவர் மகாவீர் சிங்.

1926 முதல் 1930 வரை வட இந்தியாவில் புரட்சி இயக்கங்கள் தீவிரமாகப் பணியாற்றின. குறிப்பாகச் சந்திரசேகர ஆசாத் தலைமையில் இயங்கிய ‘இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசு சங்கம்’ என்ற புரட்சி அமைப்பு இளைஞர்களைப் பெரிதும் ஈர்த்து வந்தது. பகத்சிங், சுகதேவ், இராஜகுரு, இராமச்சந்திர பிஸ்மில், சிவ வர்மா, ஷேர் ஜங் எனப் பல இளைஞர்கள் இந்தப் புரட்சி அமைப்பில் சேர்ந்து விடுதலைக்காக உழைத்து வந்தனர்.

மகாவீர் சிங். வயது 23க்குள். கடல் கடந்து வந்த வெள்ளையர்கள், பரந்து விரிந்து கிடந்த பாரத நாட்டை அடிமையாக்கி ஆண்டு வந்தது, அந்த இளைஞனின் மனதைப் பெரிதும் உறுத்தியது. பருவ வயது ஆசைகள் எதுவும் அவனுக்குள் முளைத்து எழவில்லை. சுதந்திர வெறியே அவனுக்குள் பொங்கி எழுந்தது. பெண்களின் மை பூசிய விழிகள் அவனைக் கவர்ந்து இழுக்கவில்லை. பாரதத் தாயின் கைகளில் பூட்டியிருக்கும் விலங்குகளை உடைக்கவே அவனது உள்ளம் துடித்தது.
ஆனால், அதை அறியாத அவனது தந்தையும், குடும்பத்தினரும் அவனுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் திருமணம் என்ற இனிப்பு, மகாவீர் சிங்கிற்கு மட்டும் கசந்தது. மணவாழ்வு தன் இலட்சியத்திற்கு இடையூறாக இருக்கும் என்று அவன் எண்ணினான். திருமண ஏற்பாட்டை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று மகாவீர் சிங் சிந்தித்தபோது அவனுக்குத் தோன்றிய வழி தனது தந்தை தேவி சிங்கிடம் பேசிப் பார்க்கலாம் என்பதுதான்.

ஆனால், எந்தத் தந்தையும் தனது மகனுக்கு நல்ல மணவாழ்வை அமைத்துத்தர விரும்புவாரே தவிர மரணத்தையும், சொல்லி மாளாத துயரத்தையும் தர விரும்பமாட்டார் என்ற எண்ணம், தந்தையிடம் பேசமுடியாமல் மகாவீர் சிங்கைத் தடுத்தது.

இருப்பினும் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டு தந்தை தேவி சிங் முன் சென்று நின்றான் மகாவீர் சிங். தயக்கத்துடன் வந்து நின்று மகனிடம், "என்ன மகனே! பெண்ணை உனக்குப் பிடித்திருக்கிறது அல்லவா?" என்றார் தேவி சிங்.

தனது தயக்கத்தை உதறியெறிந்த மகாவீர் சிங், "அப்பா, எனக்கு மணவாழ்வில் விருப்பமில்லை. நமது தாய்நாடு அடிமைப்பட்டு, அல்லல்பட்டுக் கிடக்கும்போது நான் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு இன்பம் துய்க்க விரும்பவில்லை. புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டு என் வாழ்நாள் முழுவதையும் விடுதலைக்கான பணியில் அர்ப்பணிக்கவே விரும்புகிறேன். எனவே, தயவுசெய்து எனக்குத் திருமண ஏற்பாடு வேண்டாம்!” என்றான்.

மகன் சொன்னதைக் கேட்ட தந்தை கொதித்து எழுந்திருக்க வேண்டுமல்லவா! வார்த்தைகளை அள்ளி வீசியிருக்க வேண்டுமல்லவா! மகனை 'ஓடிவிடு' என்று துரத்தியிருக்கவேண்டுமல்லவா? ஆனால், தேவி சிங் அப்படி ஏதும் செய்யவில்லை. ஆடாமல், அசையாமல் கொஞ்ச நேரம் 'திருமணம் வேண்டாம்' என்று சொன்ன மகனையே பார்த்தபடி சிலைபோல் நின்றார். சில நொடி நேரம்தான் அந்த அமைதி. அதன்பின் நிதானமாகச் சொன்னார்.

"மகனே, நாடு இன்று இருக்கும் நிலையில் நல்லதொரு முடிவைத்தான் எடுத்திருக்கிறாய். மணவாழ்வை எண்ணாமல், நாட்டைப் பற்றி எண்ணும் உன்னைப் பெற்றதற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். போய் வா! நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்" என்று மகிழ்ச்சியுடன் மகனை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் தேவி சிங்.

தந்தையின் நெஞ்சார்ந்த ஆசியுடன் ‘இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு சங்கத்தில்’ இணைந்த மகாவீர் சிங் அதன் புரட்சி நடவடிக்கைகள் அனைத்திலும் முதல் ஆளாக முன் நின்றார். சாண்டர்ஸ் கொலை, டில்லி மத்தியச் சட்டசபை குண்டு வெடிப்பு, ககோரி இரயில் கொள்ளை என அனைத்துத் தாக்குதல் நடவடிக்கைகளிலும் மகாவீர் சிங் முன்னின்றார். புரட்சி இயக்கத்தை ஒடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. அதன் பலனாகப் பல புரட்சி வீரர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான சிலர் இயக்கத்தைப் பற்றி சொல்லவேண்டிய நெருக்கடிக்கு ஆளாயினர்.

இந்த நிலையில் தேவி சிங் தன் மகனுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், "மகனே, உன்னைப் பெற்ற நான் பாக்கியசாலி, நீ செல்லும் பாதை மிகவும் கடினமானது. எனினும் நீ முன்னோக்கி முன்னேறியபடியே செல். எந்த நிலையிலும் இயக்கத்திற்குத் துரோகம் செய்யாதே. இந்தக் கிழட்டுத் தந்தையின் பெயரைக் காப்பாற்று!" என்று எழுதியிருந்தார்.

மரணத் தேவதை தன் மகனை எந்த நேரமும் காவு கொள்ளலாம் என்ற நிலையிலும், அந்தத் தந்தை அனுப்பிய கடிதம் இது! தந்தையின் கடிதம் தந்த ஊக்கத்தால் புரட்சி இயக்கத்தில் தன் பங்களிப்பைத் தீவிரப்படுத்தினார் மகாவீர் சிங்.

சிறிது காலத்தில் அனைத்துப் புரட்சி வீரர்களும் கைதாகினர். பகத்சிங், சுகதேவ், இராஜகுரு ஆகிய மூவரும் தூக்குமேடை ஏறினர். சந்திரச் சேகர ஆசாத் சுட்டுக் கொல்லப்பட்டார். மகாவீர் சிங் உட்படப் புரட்சி இயக்க இளைஞர்கள் பலர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்.

மகாவீர் சிங், தொலைவில் உள்ள ஆந்திர மாநிலப் பெல்லாரி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அங்கு அடைக்கப்பட்ட புரட்சியாளர்கள் கடும் சித்ரவதைக்கு ஆளாகினர். மகாவீர் சிங்கை நாள்தோறும் முகத்திலேயே அடிப்பது, அங்கிருந்த சிறையதிகாரி ஒருவரின் வழக்கம். இவ்வாறு ஒருநாள், இருநாள் அல்ல, ஒன்றரை ஆண்டுக்காலம் மகாவீர் சிங் தாக்கப்பட்டார்.

ஒருநாள் பொறுமையிழந்த மகாவீர் சிங் அந்த அதிகாரியைத் திருப்பித் தாக்கி நையப் புடைத்துவிட்டார். அதை எதிர்பார்க்காத அதிகார வர்க்கம் அதிர்ந்துபோனது. திருப்பித் தாக்கிய மகாவீர் சிங்கிற்குத் தண்டனை தர முடிவெடுத்தது. மறுநாள் அதிகாரிகள், மரச்சட்டம் ஒன்றில் அவரைக் கட்டிவைத்து, முப்பது பிரம்படிகள் கொடுத்தனர். மகாவீர் சிங்கின் சதை பிய்ந்து தொங்கியது. இருப்பினும் அந்தப் புரட்சி வீரன் அச்சமின்றி, ஒவ்வொரு பிரம்படிக்கும் 'இன்குலாப் ஜிந்தாபாத்' (புரட்சி ஓங்குக!) என்று உரக்க முழங்கினான். முழக்கத்தில் ஒலி அதிகரிக்க, அதிகரிக்கப் பிரம்படியின் வேகமும் அதிகரித்தது.

பிரம்படிக்கு அஞ்சாத மகாவீர் சிங், பெல்லாரிச் சிறையையும் புரட்சிக் கூடமாக்கிவிடுவார் என்று அஞ்சிய ஆங்கில அரசு, அவரை அங்கிருந்து அந்தமான் தீவிலிருந்த சில்வர் சிறைச்சாலைக்கு மாற்றியது.

புரட்சியாளர்கள் மற்றும் கொடும் குற்றவாளிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட நரகம்தான் அந்தமான் சில்வர் சிறைச்சாலை. இந்தியச் சிறைகளிலேயே, சிறையதிகாரிகள் அளவற்ற அக்கிரமங்கள் செய்து ஆட்டம் போட்டபோது அணுகமுடியாத அந்தமான் தீவிலிருந்த சில்வர் சிறைச் சாலையின் அதிகாரிகள் எவ்வாறு இழிவாக நடந்து கொண்டிருப்பார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

மாடுகளுக்குப் பதிலாகச் சிறைக் கைதிகள் அங்குச் செக்கிழுக்க வைக்கப்பட்டார்கள். செக்கை இரண்டு மாடுகள் இழுக்கும். சில்வர் சிறைச்சாலையிலோ செக்கை ஒரே ஒரு கைதிதான் இழுக்கவேண்டும். அதுவும் ஒரு நாளில் கட்டாயம் 30 பவுண்டு எண்ணெய் ஆட்டி எடுத்தாகவேண்டும். ஓயாமல் இழுத்தாலும்கூட ஒரு பயில்வானால்கூட 30 பவுண்டு எண்ணெய் எடுப்பது என்பது இயலவே இயலாது. அப்படி எடுக்க இயலாமல் போகும் கைதியை அடித்துச் செக்கின் நுகத்தடியில் தொங்கவிட்டு, வேறு இரண்டு கைதிகளை வைத்துச் செக்கை வேகமாகச் சுற்ற வைப்பார்கள். நுகத்தடியில் தொங்கும் கைதியின் உடல் தரையில் உரசி, உரசி இரத்தச் சேறாக ஆகும்.

சிறையதிகாரிகளின் அக்கிரமங்களை எதிர்க்கும் புரட்சியாளர்களின் கால்கள் நீண்ட இரும்புக் கம்பியின் இருபுறங்களிலும் உள்ள வளையத்தில் பூட்டப்படும். அந்தக் கைதி இரண்டடி அகலத்திற்குக் கால்களை அகட்டியபடிதான் இருக்க முடியும். இந்த நிலையிலேயேதான் அந்தக் கைதிக்கு உணவு, உறக்கம் எல்லாம்.

இதைவிட கொடிய தண்டனை ஒன்றுண்டு. கைதியின் இடுப்பில் ஓர் இரும்பு வளையம். இரண்டு கால்களிலும் தனித்தனி விலங்குகள். இடுப்பு வளையத்துடன் கால் விலங்குகள் கனமான கம்பியால் இணைக்கப்படும். இதனால், கைதியால் குனியவோ, நடக்கவோ, கால்களை மடக்கவோ முடியாது. இதே கோலத்தில் பல வாரங்கள், பல மாதங்கள் உயிர்வதைக்கு ஆளான கைதிகளும் உண்டு.

உணவு இதை விட மோசம். கீரைக் கட்டுகளில் சேர்ந்து வரும் பாம்புகளையும் வெட்டிப் போட்டுக் குழம்பு என்ற பெயரில் சாப்பிடத் தருவார்கள். இது போல மனித இனத்தையே தலைகுனியச் செய்யும் பல கொடுமைகள் அந்தக் கண்ணற்ற தீவில் நடந்தன.

மகாவீர் சிங்கால் இந்தக் கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு வாளாதிருக்க முடியவில்லை. சிறைக்கொடுமைகளைக் கண்டித்து அவர் உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவக்கினார். அதைக் கைவிடச் செய்யச் சிறையதிகாரிகள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அவர்களால் அதில் வெற்றிபெற முடியவில்லை.

அதனால் இறுதியில் அவருக்கு உணவை வலிந்து ஊட்டும் முயற்சியில் இறங்கினார்கள் சிறையதிகாரிகள். பலர் சேர்ந்து மகாவீர் சிங்கின் கை, கால்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு, இரப்பர் குழாய் மூலம் பாலை வாய் வழியாகச் செலுத்தினர். அதை உட்கொள்ள மறுத்த மகாவீர் சிங் வேண்டுமென்றே தும்மினார். தும்மும்போது பால், மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்லும். அதனால் தன் வாழ்நாள் முடியும் என்பது தெரிந்தும் அந்தப் புரட்சியாளன் பலமுறை தும்மினான். அதனால், புகட்டப்பட்ட பால் நுரையீரலில் போய்ச் சேர்ந்தது. துள்ளித் துடித்து அந்தப் புரட்சி மலர் வாடி அடங்கியது.

தனது சாவின் மூலம், தங்களை வென்றுவிட்ட அந்த மாவீரனைப் பார்த்துத் திகைத்துப்போனது சிறைத்துறை. அந்த வெறியில் அந்தப் புரட்சி வீரனின் உடலை முறைப்படி அடக்கம் செய்யாமல், மீன்களுக்கு உணவாகக் கடலில் வீசி எறிந்தார்கள்.

வாழவேண்டிய வயதில் திருமணத்தைத் துறந்து தேசவிடுதலைக்காக வெடிகுண்டு ஏந்திய அந்த வீரமகனின் உடலை, அந்தமான் கடல் தன்னுள் பெருமையுடன் ஏற்றுக்கொண்டது.

மகாவீர் சிங்கின் உடலைச் சிறையதிகாரிகள் கொண்டு சென்றபின், அவரது படுக்கையைச் சோதித்த உடனிருந்த தேசபக்தக் கைதிகள், அவர் கைப்பட எழுதிய சுருக்கமான கடிதம் ஒன்றைக் கண்டெடுத்தனர். அதில் மகாவீர் சிங் எழுதியிருந்த வரிகள் இவை.

'எப்படிப் பெறமுடியும், உயிரைத் தராமல் சுதந்திரம்? உவகையுடன் அர்ப்பணிக்கிறேன், உயிரை என் மண்ணுக்கு!'
கண்ணீருடன் இதைப் படித்த நண்பர்கள் மேலும் தேடியபோது மகாவீர் சிங்கின் துணிகளுக்கிடையே மற்றொரு கடிதத்தைக் கண்டனர். அது மகாவீர் சிங்கின் தந்தை தேவி சிங் மகனுக்கு எழுதிய கடிதம்.

'ஆங்கில அரசாங்கம் நாடு முழுவதுமிலிருந்து ஒளிவீசும் மின்னும் வைரங்களைத் தேர்ந்தெடுத்து அந்தமான் தீவில் சேர்த்திருக்கிறது. அந்த வைரங்களுக்கு இடையில் இருக்கும் நல்வாய்ப்பு உனக்குக் கிடைத்ததை அறிந்து மனம் மகிழ்ச்சி கொள்கிறது மகனே! அங்கிருந்து நீ மேலும் ஒளிவிடவும், என் பெயரையும், நாட்டின் பெயரையும் காக்கவும் என் நல்லாசிகள்' தேவி சிங் எழுதிய நெஞ்சை உருக்கும் வரிகள் இவை.

நம்புங்கள்! இப்படி ஒரு தந்தையும், இப்படி ஒரு மகனும் இருந்தார்கள்!
இப்படிப்பட்ட தியாகச் சீலர்கள் பிறந்து தங்கள் இன்னுயிர்களைப் பலி கொடுத்துப் பெற்றதுதான் இந்திய விடுதலை.
அப்படி விடுதலை பெற்ற இந்திய நாட்டில் வாழும் நாம் ஒவ்வொருவரும் எப்படி இருக்கிறோம்! யோசிப்போம்!

Sunday, 1 January 2017

மாயவனத்தின் வசீகரன்

பரமக்குடி பா. உஷாராணி


ஒளிப்படம்: தேனி ஈஸ்வர் | நன்றி: தளவாய் சுந்தரம்
டிசம்பர் 22ஆம் தேதி மதியம் மூன்று மணியளவில் நண்பர் ரிஷபன் திருவரங்கத்திலிருந்து அலைபேசியில் பேசினார்.

“நம்ம வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாடமி விருது” அவர் சொல்லி முடிப்பதற்குள் “ஹை அப்படியா! அப்படியா!” என நான் வானுக்கும், பூமிக்கும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டேன். பரவசம் என் இரு சிறகுகளாகிப் போனது. மகிழ்ச்சி வெள்ளத்தில் என் நதி நுரைத்துப் பொங்கிப் பெருக்கெடுத்தோடியது. இருக்காதா பின்னே!

‘படைப்புக் கடவுள்’ என அவரைக் கொண்டாடும் திருக்கூட்ட மரபு எங்களுடையது. வண்ணதாசனைப் பிடிக்கும் எனச் சொல்பவர்கள், அடுத்த நொடியே எங்கள் ஆத்மார்த்தமான தோழமைகளாகிவிடுகிற வரம் பெற்றவர்கள் நாங்கள். அவர் வாழும் காலத்தில், நாமும் வாழ்கிறோம் எனப் பெருமிதப்படுகிறவர்கள்.

தொலைக்காட்சியே பார்க்காத நான், அன்று முழுக்கத் தொலைக்காட்சியை ஓடவிட்டேன். மிக அருமையாகப் பேட்டி தந்துகொண்டிருந்தார். தொலைக்காட்சி நிருபரின் ஒரு கேள்விக்கு “படைப்பாளியான என்னைவிட கலைஞன் என்ற முறையில் வண்ணநிலவனுக்கு இந்த விருது சேர்ந்திருக்கலாம்” என்றார். என்ன சொல்ல! இதை இதைத்தான் எழுத்துக்களாக விதைக்கிறார் அவர். பிரியத்தின் திரைச்சீலையில், நேசத்தூரிகையால் அன்பின் ஓவியங்களைத் தீட்டிக்கொண்டிருப்பவர் அல்லவா அவர்.

சி. கல்யாணசுந்தரம் என்கிற இயற்பெயரைக் கொண்டவர். ‘கல்யாண்ஜி’ என்ற பெயரில் கவிதை களும், ‘வண்ணதாசன்’ என்கிற பெயரில் கதைகளுமாய் 1962இலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார். கதைகளாகட்டும், கவிதைகளாகட்டும், கடிதங்களாகட்டும் அவரது எழுத்துக்கள் தனித்த வண்ணமும், அடர்த்தியும் நிரம்பியவை. எல்லோரிடமும் அன்பாயிருக்கத் தூண்டுபவை. எதிர்ப்படும் எவரையும் சினேகிக்க உந்தித் தள்ளுபவை. மனசை மிருதுபடுத்துகிற, இதப்படுத்துகிற இழைகளால், அளப்பரிய அன்பின் பிரபஞ்சத்தை நெய்பவை.

‘மனிதனே, இந்த உலகை நீ, கடவுளின் கண்களால் பார்’ என்பாரே கலீல் ஜிப்ரான். அதைப் போன்றே வண்ணதாசனும் கடவுளின் கண்களால் இவ்வுலகை, இம்மனிதர்களைக் காணும் அற்புதர்.

மானுட அன்பின் வற்றாத, நெகிழ்ச்சியூட்டும் ஈரங்களைத் தன் தனித்துவமிக்க எழுத்தாற்றலால் பரிமளிக்கச் செய்கிறவர். வனப்பு மிளிரும் அவரது நுண்மையான மொழிநடைக்கு உதாரணங்கள் முன்னும் இல்லை; பின்னும் இல்லை.

க்ரைம் நாவல்கள் தொடங்கிப் பாலகுமாரன் வரை பள்ளி புத்தகப் பைக்குள் மறைத்து எடுத்துச் சென்று, வாசிக்கும் அளவிற்குப் புத்தகப் பைத்தியமான நான், வண்ணதாசனில் வந்து நிலைத்தது. வண்ணதாசனின் ‘எல்லோருக்கும் அன்புடன்’ கடிதத் தொகுப்பு நூலை எனக்குத் தபாலில் அனுப்பியிருந்தார். என் உலகத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது அந்தப் புத்தகம். அதன்பின் கதை, கவிதை என அவரது தொகுப்புகளை வாசிக்க, வாசிக்க என் பூமி புதுசாய் மாறிப்போனது. ‘வண்ணதாசன் கதைகள்’ நூலே எனக்கான பகவத் கீதையானது.

அவரது பெருவனத்திற்குள் அன்று நுழைந்தவள், இன்று வரை மீளவேயில்லை. நான் மட்டுமல்ல, அவரது வாசகர்கள் ஒவ்வொருவருமே அப்படியானவர்கள்தான்! அவ்வாறானதொரு மாயவனத்தின் வசீகரன் அவர்.

‘சமவெளி, கலைக்க முடியாத ஒப்பனைகள், மணல் உள்ள ஆறு, கிருஷ்ணன் வைத்த வீடு, சின்னு முதல் சின்னு வரை, இன்னொரு கேலிச்சித்திரம், பூனை எழுதிய அறை, மீனைப் போலவே இருக்கிற மீன், நாபிக்கமலம், இப்போது விருது பெற்றிருக்கும் ‘ஒரு சிறு இசை’ வரைக்கும், எத்தனை எத்தனை தொகுப்புகள்!

ஒவ்வொரு வருடமும் சாகித்திய அகாடமி விருது அறிவிக்கும்போதெல்லாம், பரபரப்புடன் எதிர்பார்த்து, ஏமாற்றத்துடன் கடந்து செல்வேன்.

1954இல் பிரதமர் நேரு தொடங்கி வைத்த அமைப்புதான் சாகித்திய அகாடமி. இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளிலிருந்து, ஒவ்வொரு மொழிக்கும், ஒரு எழுத்தாளர் என விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருதாக ஒரு லட்சத்திற்கான காசோலை, சால்வை, செப்புப்பட்டயம் வழங்கப்படும். தமிழ்மொழிக்கான பிரிவில் ஆரம்பத்திலிருந்தே எழுத்தாளர் தேர்வு என்பது கடும் விமர்ச்சனங்களுக்கு உள்ளாகி விடும்.

‘உலகில் நல்லறங்களும், நல்லிசையும், நல்லியல்புகளும், நல்ல மனிதர்களும் போற்றப்படுகிறபோது, ஒரு திருவிழா போல் நிகழ வேண்டும். ஆரவாரமல்ல. நிறைவு, பெருமிதம், எல்லோர் முகங்களிலும் சுடர். ஒருவர் கையை ஒருவர் பற்றி ஒருவர் தோளை ஒருவர் அணைத்து, எல்லோர் கைகளிலும் சந்தனம். எல்லோர் சிகையிலும் ரோஜா இதழ்.’

தன் தந்தை தி.க.சிக்கு நிகழ்ச்சிக்கு வண்ணதாசன் எழுதிய கடித வரிகள் இவை. இதோ இப்போது அவரைக் கொண்டாடும் எங்கள் எல்லோர் முகங்களிலும் சுடர். ஒவ்வொருவர் கையிலும் சந்தனம். ஒவ்வொருவர் சிகையிலும் ரோஜா இதழ்.

ஆம்! இது திருவிழாக்காலம். வாழ்க நீ எம்மான் எந்தையே!

Thursday, 20 October 2016

இதுவும் இந்தியாவில்தான்!

உலகில் எத்தனையோ ஆட்சி முறைகள் இருக்கின்றன. முடியாட்சி, குடியாட்சி, சர்வாதிகார ஆட்சி இராணுவ ஆட்சி, பாசிச ஆட்சி, நாசிச ஆட்சி எனப் பல நாடுகளில் பலவிதமான ஆட்சி முறைகளில் ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சி முறைகள் ஒவ்வொன்றிலும் சில குறைகளும், சில நிறைகளும் கலந்தே இருக்கின்றன. இருப்பினும், அரசியல் அறிஞர்களால் நிறைகள் அதிகமாகவும், குறைகள் குறைவாகவும் உள்ள ஆட்சிமுறை, மக்களாட்சி முறைதான் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மக்களாட்சி முறை நம் பாரத நாட்டில், பலரால் பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சாதியவாதமும், மதவாதமும், ஊழலும், கையூட்டும் நமது மக்களாட்சி முறையை மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
மக்களாட்சி முறைக்கு மாண்பு சேர்த்த ஒரு நிகழ்வை நாம் தெரிந்து கொண்டால், இன்று எத்தகைய சீரழிவை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பது விளங்கும்.
அடிமை விலங்கை உடைத்து எறிந்து இந்தியா, தன்னைக் குடியரசு நாடாக அறிவித்தது. 1952ஆம் ஆண்டு நாடு முழுமைக்குமான முதல் பொதுத் தேர்தல் நடந்தது. இருபத்தியொரு வயது வந்த அனைவருக்கும் சாதி, மத, வர்க்க வேறுபாடில்லாமல் வாக்குரிமை வழங்கப்பட்டது. அதற்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் பட்டா வைத்திருக்கும் நிலச்சுவான்தார்களுக்கும், பணக்காரர்களுக்கும், படித்த பட்டதாரிகளுக்கும் மட்டுமே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. அவர்களால்தான் சரியாக வாக்களிக்க முடியும் என்பது அவர்களது கருத்து.
இதனால் உலகமே இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தலை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தது. குறிப்பாக மேல்நாடுகளில் இந்தியாவை நோக்கித் தங்கள் கவனத்தைத் திருப்பியிருந்தன. காரணம் இங்கிலாந்து நாட்டின் மக்களாட்சி முறை பக்குவப்பட்டது. பல நூற்றாண்டுகளாகச் சிறிது, சிறிதாகக் குடியாட்சி முறைக்குத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்ட மூத்த மக்களாட்சி நாடு அது. பிரான்ஸ் போன்ற நாடுகளும் அப்படியே. அமெரிக்காவோ 500 ஆண்டுக் காலக் குடியரசு நாடு. ஆனால் இந்தியாவோ புதிதாகக் குடியரசாக மலர்ந்த ஒன்று. இந்திய மக்களோ படிப்பறிவில்லாதவர்கள். குடியாட்சி முறைக்குப் பக்குவப்படாதவர்கள். இதனால்தான் இகழ்ச்சியோடும், அவநம்பிக்கையோடும் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலைப் பார்த்தன.
இந்தியாவை மக்களாட்சி நாடாக, மதச்சார்பற்ற நாடாக மாற்றியவரும், வாக்குரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, வழிபாட்டுரிமை என இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் நமக்குக் கிடைக்கக் காரணமானவரும், முதல் பிரதமருமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தனது கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நாடெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வந்தார். நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்த கட்சி என்பதாலும், பண்பாளர் நேருவின் தலைமை மீது கொண்ட நம்பிக்கையாலும் பாரத நாடெங்கும் காங்கிரஸ் ஆதரவு அலை அடித்துக் கொண்டிருந்தது. காங்கிரஸ் சார்பில் கழுதை நின்றால்கூட வெற்றி என்ற சூழ்நிலை நிலவியது.
இன்று மத்திய பிரதேசம் என்று அழைக்கப்படும் மாநிலம், அன்று விந்தியப் பிரதேசம் என்று அழைக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் ‘ரேவா’ என்றொரு சட்டமன்றத் தொகுதி இருந்தது. அந்தத் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ராவ் ஷிவ்பகதூர் சிங் என்பவர் நிறுத்தப்பட்டிருந்தார். அவர் சாதாரண ஆள் இல்லை. ரேவா சமஸ்தானத்தின் அரசர். மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றவர். அதனால் காங்கிரஸ் கட்சி இதற்கு முந்தைய தேர்தலில் வேட்பாளராக்கி வெற்றிபெற வைத்து அமைச்சராகவும் ஆக்கியிருந்தது.
ராவ் ஷிவ்பகதூர் சிங்
நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்காகப் பரப்புரை செய்து ஆதரவு திரட்டி வந்த பிரதமர் நேரு, ரேவா தொகுதிக்கும் வந்தார். விடுதலைப் போராட்டக் காலத்தில், நேருவுடன் ஒரே சிறையில் இருந்த தியாகி ஒருவர் அவரிடம் சில செய்திகளைக் கூறினார். கூறப்பட்ட செய்திகள் சினத்தின் உச்சிக்கு நேரு பெருமகனைக் கொண்டு சென்றன. தியாகியை அனுப்பிவிட்டுச் சிறிது நேரச் சிந்தனையில் ஆழ்ந்தார் நேரு.
அன்று பெரியதொரு பேரணியும், பேரணி முடிவில் பெரிய பொதுக்கூட்டமும் இருந்தது. பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை நேரு அறிமுகம் செய்து வைத்துப் பேசவிருந்தார். இந்தியாவின் முடிசூடா மன்னரான நேரு பேசவிருக்கும் பொதுக்கூட்டம் என்றால் கேட்க வேண்டுமா? கட்டுக்கடங்காத கூட்டம் மைதானத்தில் நிரம்பிக் கிடந்தது. மேடையேறிய நேரு, மற்றவர்களைப் பேச வேண்டாமென்று கூறி நிறுத்திவிட்டு நேரடியாகத் தானே ஒலிவாங்கி முன் நின்று பேசத் தொடங்கினார். மரபுப்படியான சில வார்த்தைகளைப் பேசிவிட்டு, தான் கூற வந்த செய்திக்கு வந்தார் நேரு.
“பெரியோர்களே! இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பெரும் போராட்டத்தை நடத்திக் காங்கிரஸ் பேரியக்கம் வெற்றியைத் தேடித் தந்தது. உரிமை பெற்ற மனிதர்களாக நாம் ஆனோம். அது மட்டும் போதாதென்று குடியாட்சி முறையையும், காங்கிரஸ் பேரியக்கம் பெற்றுத் தந்தது. நம்மை நாமே ஆண்டு கொள்ளும் முடியாட்சியில், நமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முதல் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியா முழுவதும் மக்களவைக்கும், சட்டப் பேரவைகளுக்கும் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறோம். இந்தியத் திருநாட்டின் சுதந்திரமும், ஒருமைப்பாடும், ஜனநாயகமும் காப்பாற்றப்பட வேண்டுமானால், காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருப்பது அவசியம்“ எனக் கூறி நிறுத்திய நேரு, சிறிது இடைவெளி விட்டுப் பேச்சைத் தொடர்ந்தார்.
“ஆனால், அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக நாங்கள் நிறுத்தியிருக்கும் ஒவ்வொருவரையும் ஜவஹர்லால் நேருதான் தேர்ந்தெடுத்து நிறுத்தியிருக்கிறார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அது நடைமுறை சாத்தியமல்ல. அந்தந்த மாவட்டக் காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் வட்டாரக் காங்கிரஸ் கமிட்டிகள் பரிந்துரை செய்யும் வேட்பாளர்களைத்தான் நாங்கள் தில்லியில் ஏற்றுக்கொள்கிறோம். அவ்வளவே! அதனால், காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப்பட்டிருக்கும் அனைத்து வேட்பாளர்களுமே அப்பழுக்கற்றத் தியாகிகள் என்றோ, தகுதியானவர்கள் என்றோ நீங்கள் கருதிவிடக்கூடாது!”
பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேச்சு தொடரத் தொடர மேடையிலிருந்தவர்களின் முகங்களில் குழப்பம் கூடுகட்டத் தொடங்கியது. பொதுமக்கள் முகங்களிலோ வியப்புப் புறாக்கள் சிறகடித்துப் பறக்கத் தொடங்கின. நேரு பேச்சைத் தொடர்ந்தார்.
“எனக்குக் காங்கிரஸ் கட்சி முக்கியம். அந்தக் கட்சியால்தான் இந்த நாட்டை ஒற்றுமையாகவும், சுதந்திர நாடாகவும் பாதுகாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஆனால், காங்கிரசைவிட எனக்கு ஜனநாயகம் முக்கியம். ஜனநாயகம் இருந்தால்தான் இந்த நாட்டின் சுதந்திரமும், ஒற்றுமையும் பாதுகாக்கப்படும். இந்தியா காப்பாற்றப்பட வேண்டுமானால் நீங்கள் நல்லவர்களை உங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்!”
சாதாரணமாகப் பேசிவந்த நேரு, சிறிது இடைவெளி விட்டுவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தார். இப்போது அவர் குரல் உயர்ந்தது. குரலில் சினம் துளிர்விட்டது.
“மக்களே! நீங்கள் வாக்களிக்கும் போது கொலைகாரர்கள், குற்றப் பின்னணி உடையவர்கள், சமூக விரோதிகள், பதுக்கல் பேர்வழிகள், பதவியைத் தங்களது சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களைத் துன்பப்படுத்துபவர்கள், சாதிவெறி பிடித்தவர்கள் இப்படிப்பட்டவர்களை அவர்கள் காங்கிரஸ் வேட்பாளர்களாகவே இருந்தாலும், அருள்கூர்ந்து தேர்ந்தெடுத்து விடாதீர்கள். அப்படிப்பட்ட பிரதிநிதிகளால் ஜனநாயகம் சீர்குலைந்து நமது சுதந்திரத்திற்கே பொருளில்லாமல் போய்விடும்!”
பேச்சை நிறுத்திய நேரு, மேடை மேலிருந்த மன்னரும், கட்சியின் வேட்பாளருமான ராவ் ஷிவ் பகதூர் சிங் மீது தன் பார்வையை வீசிவிட்டுத் தன் பேச்சைத் தொடர்ந்தார். அவர் குரலில் வெப்பம் அதிகரித்தது. வேதனையும், சினமும் அவர் முகத்தில் கொப்பளித்தது.
“நான் இங்கு வரும்போது எனக்கு ஒரு செய்தி தெரியவந்தது. இந்தச் சமஸ்தான மன்னர் ராவ் ஷிவ் பகதூர் சிங்கின் மீது பல குற்ற வழக்குகள் இருப்பதாகவும், விந்தியப் பிரதேச அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இவர், தனது உதவியாளருடன் சேர்ந்து பன்னா வைரச் சுரங்க நிறுவனத்திற்குச் சாதகமாகப் போலி ஆவணங்களைத் தயாரித்து உதவி இருப்பதாகவும், அதற்காக 25000 ரூபாய் இலஞ்சம் வாங்கியிருக்கிறார் என்று இவர் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் அறிகிறேன். இப்படிப்பட்ட நபர்களை நீங்கள் நேருவின் பிரதிநிதியென்று நினைத்துத் தேர்ந்தெடுத்தால் அது ஜனநாயகத்திற்குச் செய்கின்ற துரோகமாகும். உங்களுக்குக் காங்கிரஸ் கட்சியோ, சோஷலிஸ்ட் கட்சியோ பிடிக்கும் என்பதற்காக, அந்தக் கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர் யார் எவராக இருந்தாலும் வாக்களித்து விடாதீர்கள். எங்களது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகவே இருந்தாலும், ராவ் ஷிவ் பகதூர் சிங் ஒரு தவறான வேட்பாளர். எனவே இவரைத் தோற்கடித்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பது உங்கள் கடமை. அனைவருக்கும் வணக்கம்!”
தன் சிம்மக் கர்ஜனையை முடித்த நேரு, மேடையை விட்டு இறங்கித் தான் வந்த வாகனத்தில் புறப்பட்டுவிட்டார். மேடையிலிருந்த கட்சிக்காரர்களும், கூடியிருந்த மக்களும் பிரமை பிடித்து நின்றனர். மன்னரும், வேட்பாளருமான ராவ் பகதூர் சிங்கோ, தாங்க முடியாத அவமானத்தால் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.
தன் கட்சி வேட்பாளர் என்று பார்க்காமல், அவரின் தவற்றைச் சுட்டிக்காட்டி “இவருக்கு வாக்களிக்காதீர்கள்!” என்ற நேருவின் பேச்சால் மன்னரின் தலை கவிழ்ந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி தலைநிமிர்ந்தது.
தேர்தல் நாள் வந்தது. மக்கள் திரண்டு வந்து வாக்களித்தார்கள். பெரும் செல்வாக்கு பெற்ற அரசரான ராவ் ஷிவ் பகதூர் சிங், நேற்று வரை தன்னால் ஆளப்பட்ட மக்களால் தோற்கடிக்கப்பட்டார்! தோற்கடிக்கப்பட்டதோடு வைப்புத் தொகையையும் பறிகொடுத்தார்!!
மேலும், அவர் மீது நடத்தப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுச் சிறை சென்றதோடு, ரேவா சிறைச்சாலையிலேயே மரணமடைந்தார்.
சந்தேகம் வேண்டாம்! இப்படி நடந்தது நம் இந்தியாவில்தான்!
கவிஞர் பாரதன் | கைப்பேசி: 9362650100
கிழக்கு வாசல் உதயம் ‘ஆகஸ்ட்' 2016 இதழில் இடம்பெற்ற ‘மகத்தான மனிதர்கள்.. வியப்பான நிகழ்வுகள்!’ பகுதியிலிருந்து

Monday, 26 September 2016

யோசித்திருந்தால் வீசியிருக்கவே மாட்டார்!

ன்று காலை ஒன்பது மணியிருக்கும். வெள்ளை வண்ண ஸ்கூட்டரில் ஏதோ வெள்ளைக் குதிரை மீதமர்ந்து பயணிக்கும் பரவசத்தோடு மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தேன். அதிகச் சேதத்தைச் சந்திக்காத சாலை அது. அதனால் வாகனங்கள் ஒவ்வொன்றும் ‘பாயும் புலிகளாக’ பாய்ந்து கொண்டேயிருந்தன.

ஒரு பைக் என்னை முந்திக்கொண்டு சென்றது. அந்தப் பைக்கில் மொத்தக் குடும்பமும் அமர்ந்திருந்தது. கணவன் மனைவி இருவருமே பெருத்த உடம்பு. இரண்டு பிள்ளைகள். அவர்களும் சளைத்தவர்கள் அல்ல. நெருக்கியடித்துக் கொண்டே அமர்ந்திருந்தனர். முன்னால் அமர்ந்திருந்த பிள்ளை கையைக் குறுக்கே நெடுக்கே நீட்டினாலே பைக் ஓட்டுபவர் தடுமாறிப் போவார். ஆனாலும் அவர் வேகமாகவே போய்க்கொண்டிருந்தார். ‘ஆபத்தை மடியிலே கட்டிக்கிட்டு போகிற மாதிரி இப்படிப் போகணுமா’ என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ‘அதெல்லாம் அவங்களுக்குத் தெரியும். நீ வண்டியை ஒழுங்கா ஓட்டிக்கிட்டுப் போ! அது போதும்!’ என் புத்தி என்னை எச்சரித்தது.
எங்களைத் தாண்டிக் கொண்டு ஒரு தனியார் பேருந்து முன்னால் பறந்தது. ‘ஏதோ இவங்க போறதுக்காக மட்டுமே ரோடு போட்ட மாதிரியில்ல பறக்கிறாங்க!’ என்று எரிச்சலோடு முணுமுணுத்துக்கொண்டேன்.

அந்த நேரத்தில் முன்னால் குடும்பத்துடன் போய்க்கொண்டிருந்த பைக் பெருத்த அலறலுடன் கீழே சாய்ந்தது. ஓட்டியவர் ஒரு பக்கம், பைக் ஒரு பக்கம், பிள்ளைகள் ஒரு பக்கம், அந்த அம்மா ஒரு பக்கம் எனச் சாலையில் சிதறி விழுந்து வலி தாங்க முடியாமல் அலறினர். பதற்றமடைந்த நான் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு அவசர அவசரமாய் ஓடிப்போய்ப் பிள்ளைகளைத் தூக்கி விட்டேன். அதற்குள் எதிரும், புதிருமாகப் பைக்குகளில் வந்தவர்கள் ஓடிவந்து அவரையும், அந்த அம்மாவையும் தூக்கிவிட்டுக் கைகால்களைத் தடவிக் கொடுத்தனர். நல்லவேளை! சின்னஞ்சிறு சிராய்ப்புகளைத் தவிரப் பெருத்த காயம் ஏதும் ஏற்படவில்லை.

என்ன நடந்தது? உடம்பு முழுக்க வெடவெடவென நடுங்க பைக் ஓட்டிய அந்தக் குடும்பத் தலைவர் குரல் நடுங்க அச்சம் மாறாமல் சொன்னார். “இப்போ போச்சே.. அந்தப் பஸ்ஸின் ஜன்னல் வழியே எதையோ தின்னுட்டு காலியான ‘பிளாஸ்டிக் கேரி பேக்கை’ யாரோ தூக்கி வெளியே வீசியிருக்காங்க. அது பறந்து வந்து பின்னால போய்க்கொண்டிருந்த என் முகத்தில படாருன்னு மூடிடுச்சு. நான் தடுமாறிப் பைக்கைக் கீழே விட்டுட்டேன். நல்லவேளை! எங்க பின்னாடி அந்தப் பஸ் மாதிரியே வேற பஸ்ஸோ, லாரியோ, வேகமா வந்திருந்தா ஒட்டுமொத்தக் குடும்பத்தோட மொத்தமா நாங்க போய்ச் சேர்ந்திருப்போம்” நிம்மதி பெருமூச்சு விட்டார், அந்தக் குடும்பத் தலைவர்.

பேருந்திலிருந்து கேரி பேக்கை வீசியெறிந்தவர், அந்தப் பிளாஸ்டிக் பையால் பின்னால் பைக்கில் வருபவருக்கு இப்படி ஓர் ஆபத்து ஏற்படுத்தும் என்று யோசித்திருப்பாரா? நம்மில் பலர் எதைப் பற்றியும் சரிவர யோசிக்காததால்தானே விதவிதமான சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறோம். கையில் இருந்த காலிப் பையைத் தூக்கி வெளியே போடவேண்டும், அவருக்கு வேண்டியது அவ்வளவுதான்! யோசித்திருந்தால் வீசியிருக்கவே மாட்டார்.

யோசிப்போம்!

- உத்தமசோழன்
கிழக்கு வாசல் உதயம் ஜனவரி 2016 இதழில் வெளிவந்த 'என் வாசலின் வழியே' பகுதியில் வந்த செய்தி

Wednesday, 15 April 2015

"உலகின் உன்னதங்கள் பெண்களே!"

கிழக்கு வாசல் உதயம் மார்ச் 2015 இதழில் வெளிவந்த கவிஞர் ஈழவாணியுடனான ஒரு சந்திப்பு!


"மங்கையராய்ப் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா! அப்படியா?”

“இந்தக் கருத்தை மறுப்பதற்கேதுமில்லை. பூமியை, உலகை ஆளும் பெண் ஒவ்வொரு விடயத்தையும் தன்னகப்படுத்திக் கொள்கிறாள். குறிப்பாக படைக்கும் சத்தியை அதிகமாகக் கொண்டிருப்பதால். பாசம், பற்று என்ற வலைக்குள் இலகுவாகச் சிக்கிக்கொள்வதால் எதிர்ப்பாலினரிடம் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கியும் கொள்கிறார்கள். இதைத் தமக்குச் சாதகமாக்கி இடையறாத துன்பத்தையும், இம்சைகளையும் கொடுத்து இழிவுபடுத்தி, ‘போகத்துக்கு மட்டும் பெண், வீட்டுக்குள்ளே மட்டுமே பெண்’, இவ்வாறான கருத்துக்களைத் திணிக்கிறார்கள்.

ஒரு உயிரைப் பெற்றெடுக்கக்கூடிய பெண்மை, அதைச் சுமந்து வலிகள், துன்பங்களைத் தாங்கி, உலகில் இன்னொரு தனியாளாக வாழ்வதற்கு வழிகளையும் தேவைகளையும் நிறைவுற அமைத்துக்கொடுக்கிறாளே பெண்! இத்தனை சக்தியைக் கொண்ட மங்கையாய்ப் பிறப்பதற்கு பாவம் செய்துவிட்டால் எப்படி முடியும்?

இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் சாதிக்கிறார்கள். விமானம் ஓட்டுவதிலிருந்து வீட்டில் புதிது புதிதானவற்றைக் கண்டுபிடித்து, மனித வாழ்க்கையின் மகா உன்னத மகிழ்ச்சியை உணர்த்தி மகிழ்வதற்காக. ஏன் கட்டப்பஞ்சாயத்து நடத்தியும் ஓடஓட விரட்டியடித்து ஒதுக்க முயலும் கூட்டத்துக்குள்ளும் எதிர்த்து நின்று வாழ்ந்து சாதிக்கும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். ஈழப்போராட்டத்திலே தாய்மண்ணைக் காக்க தமது எதிர்காலத்தையும், உயிரையும் துச்சமாய் மதித்துப் போராடி சாதனையோடு வீரச்சாவடைந்த மங்கையரெல்லாம் உலக வரலாற்றின் உன்னதங்களாகவே போற்றப்படுவர்.”

“உங்களுக்குப் பிடித்த உங்கள் கவிதை எது? ஏன்?"

அப்பா 
'என்னைக் காட்டிய
வண்ணக் கண்ணாடி
என்னை நானுணர்ந்து
விம்பம் பார்க்கையில்
நழுவி உடைந்துபோனது
ஓருருவமான மாயையில்
மறைந்திருந்த என்னை
ஆயிரம் சக்திகளாய்; உணர்த்தியவர்
உடைந்த சில்லங்களில்
என் விம்பங்கள்'

அரச மரங்களே
'வன்னியின் வளமிகு காடுகளே
உமக்கோர் அறிவிப்பு 
தரமிகு உம் குடும்பத்தில்
எழில்மிகு அரச மரங்களுண்டோ
யாழின் சுண்ணாம்புச் சுவையூறிச்
செழித்த மரங்களே
உண்டோ உம்மிடமும்
உண்டெனில் 
அவசர அறிக்கையில்
கொலைத்தீர்ப்பிடுங்கள் ஏனெனில்
உம்மண்ணை ஆக்கிரமிக்க
அரசமரநிழல் பாத்தலைகிறான் புத்தன்.'

கவிதை எழுதும் தருணங்கள் எனக்கு மிகப் பிடித்தமானவையும் வித்தியாசமானவையும்கூட. எல்லா நேரங்களிலும் எழுதுவதில்லை. எழுதத் தோன்றும் அந்தத் தருணத்தில் அவற்றை எழுதவில்லை என்றால் எனக்கு மறந்து போய்விடும். ஆனால், எல்லாச் சந்தர்ப்பத்திலும் தோன்றுவதை எழுதிவிட முடிவதில்லை.

கவிதைகளைப் பெரும்பாலும் ரசித்து அனுபவித்தே எழுதியிருப்பேன். அதனால், அவற்றை ரசனையோடு நானே திரும்பத் திரும்பப் படித்துப் பார்ப்பதுமுண்டு. எல்லாமே என் குழந்தைகளே!

ஆனாலும், இங்கு மேலே கூறிய கவிதைகள் வித்தியாசமானவை. அப்பாவைப் பற்றிய கவிதை ஒன்று. சிறுவயதிலேயே அப்பா இறந்துவிட்டார். என்னை ஒரு மனுசியாய், மகளாய், பெண்ணாய், சமூகத்தில் ஒரு பிரஜையாய் அறியப்படும்போது அவர் நிஜமான உருவத்தில் என்னோடு இருக்கவில்லை. ஆனால், மாய உலகில் என்னோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன்.

அரசமரங்கள் பற்றிய அடுத்த கவிதை இலங்கையில் முக்கியமான இடங்களில் நிற்கும் அரசமரங்களில் புத்தர் குடிபூர விகாரைகள் உருவாகிவிடும். 2009 ஈழப்போர் நிறைவடைந்த பின்னர் அரசமரம் நிற்கிற தமிழர் பகுதிகளில் எல்லாம் புத்தரைக் கொணர்ந்து உட்காரவைத்து தம் விகாரைகளை அமைத்துக்கொள்கிறார்கள் சிங்களர். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் இயலாமையின் வெளிப்பாடாய் வந்த அக்கவிதையும் எப்போதும் மனதில் நின்று கொண்டேயிருக்கிறது.”

“நீங்கள் ஒரு கவிஞர். உங்களுக்கு மற்ற யாருடைய கவிதைகள் பிடிக்கும்?”

“கவிதைகளை எனக்கு இன்னாருடையது என்பதற்காகப் பிடிப்பதில்லை. படித்தவுடன் சில கவிதைகள் பட்டென மனதில் ஒட்டிக்கொள்கிறது. கவிதையின் கருத்து, நயம், சந்தம், சூழ்நிலைகள் என்பன இவற்றில் செல்வாக்கு செலுத்துவதாக நான் நினைக்கிறேன். சில கவிதைகளில் கருத்திருக்காது. அந்த நேரத்து மனநிலையில் அது ஒட்டிக்கொள்ளும். சில சமயங்களில் கவிதைகள் மாய உலகில் சில நிமிட சஞ்சாரிப்பிற்கான திறவுகோல்களாகக் கூட இருக்கிறது.

ஆழியாளுடைய கவிதைகள், புதுவை ரத்னதுரையுடைய கவிதைகள், கவிஞர் காசி ஆனந்தனுடைய கவிதைகள், அம்புலியுடைய கவிதைகள், தா. பாலகணேசனுடைய கவிதைகள், சிவரமணியுடையவை, பஹிமாஜகானுடைய கவிதைகள் என நிறையப் பிடிக்கும். நான் கூறிய இவர்கள் எல்லாம் ஈழத்துக் கவிஞர்கள். 

தமிழ்நாட்டுக் கவிஞர்கள் பல பேருடையவை எனக்குப் பிடிக்கும். அவற்றைத் தனித்தனியே சொல்லிப் இங்கு இடம் போதாது.

அண்மையில் எனக்குப் பிடித்த கவிதை ஒன்றைப் படித்தேன். அது தீபச்செல்வனுடையதே!

‘இறுதிநாள் வழியில் தொலைந்தவர்கள்
வழியில் தொலைந்த ஆடுகளின் கதைகளால்
நிறைந்துபோயிருக்கிறது இந்த நாள்
இந்த வானொலி வழி தவறியவர்களை
இன்னும் தேடிக்கொண்டிருக்கிற இரவு நிகழ்ச்சியை
ஒலிபரப்பிக்கொண்டிருக்கிறது
கைகளுக்குள்ளிலிருந்து எப்படி நழுவி விழுந்தீர்கள்
என்று ஒவ்வொரு தாய்மார்களும்
இரவு நிகழ்ச்சியில் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்
இறுதி நாளிலிருந்து இன்று வரை
உனதம்மா உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறாள்.
இப்படியாக அந்தக் கவிதை தொடர்கிறது.’ ”

“பதிப்புலக முன்னோடி எஸ்.பொவின் ‘மித்ர பதிப்பகம்’ உங்கள் பொறுப்பில் உள்ளது. அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா? எஸ்.பொ. என்கிற எஸ். பொன்னுதுரை உங்கள் பார்வையில் எப்படி?"

“எஸ்.பொ ஈழத்தில், தமிழ்நாட்டில் மட்டுமில்லாது உலகளாவிய தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் மிகத் தொன்மையான எழுத்தாளுமையாவார். தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகளை ஆழமாக அறிந்து புலமையோடு நவீன இலக்கியத்தைப் படைத்தவர். அதுமட்டுமின்றி ஆங்கிலப் புலமை கொண்டவர். இதனால் சர்வதேச இலக்கியங்களிலும், தத்துவ நூல்களிலும் பயிற்சியும் தேர்ச்சியுமுடையவர். இதனாலேயே சர்வதேச மட்டத்திலான இலக்கியங்களைப் படைக்கும் மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ முடிந்திருக்கிறது. பல மொழிபெயர்ப்பு நூல்களைத் தந்திருக்கிறார். மேலும், சிறுகதைகள், தன் வரலாற்று நூல், அரசியல் - பண்பாட்டுக் கட்டுரைகள் தமிழ் இலக்கண ஆய்வுக் கட்டுரைகள் விமர்சன நூல்கள், நாடகங்கள், உரைச் சித்திரங்கள் கவிதைகள் என எல்லாத் துறையிலும் விளங்கியவர்.


இவருடைய நூல்கள் பலதரப்பட்டவை. மனிதனை ஆட்டிப் படைக்கும் காமத்தையும், யாழ்ப்பாணத்து வாழ்க்கையினையும், மனித உணர்வுகளின் அடியாழத்தையும் மிக இயல்பாகவும், உண்மையாகவும் அணுகியிருக்கிறது சடங்கு என்ற நாவல். தொடர்ச்சியாக நனைவிடை தோய்தல், பூ, கீதையின் நிழலில், இனி, ஈடு, கேள்விக்குறி, அப்பாவும் மகனும், உறவுகள், தேடல், முறுவல், மத்தாப்பூ, சதுரங்கம், வலைமுள், தீதும் நன்றும், மணிமகுடம் போன்ற பல நாவல்களோடு எஸ்.பொ கதைகள் தொகுக்கப்பட்டும் வந்திருக்கிறது. யாரும் சொல்லத் துணியாத, வெளிவராத பல அரசியல் நாடகங்களை, அந்தரங்கத் தொடர்புகளைப் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார். எஸ்.பொ.வின் படைப்புகள் பல. ஒவ்வொன்றும் வாழ்வின் ஒவ்வொரு கோலங்கள்.

மித்ரவும் எஸ்.பொவுடைய நூல் பணிகளும் மிக ஆழமானதாகவும், ஈழத்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்திருக்கிறது. 2013ஆம் ஆண்டிலிருந்து நானே மித்ரவை நடத்திக்கொண்டிருக்கிறேன். அவருடைய வயோதிமையும், தொடர்ந்து சென்னையில் இருக்க முடியாமையும்  மித்ரவை யாராவது ஒருவரிடம் ஒப்படைப்பதற்குப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தது. நான் ஆவணப்படம் எடுப்பதற்காக அக்காலப் பகுதியில் எஸ்.பொ.வை வந்து சந்தித்துப் பேசுவேன். ‘பூவரசி’ காலாண்டிதழ், நூல்கள் என நான் பதிப்புத் துறையிலும் இருந்ததால், என்னுடைய செயற் பாடுகளில் நம்பிக்கையுற்றிருந்ததாலும் தன்னுடைய எழுத்து வாரிசாக என்னை அறிவித்திருந்தார். மித்ரவையும் தொடர்ந்து நடத்தும் தகுதியும், திறமையும் எனக்கு இருப்பதாகக் கருதி என்னிடம் அதை ஒப்படைத்துவிட்டார்.”

“இன்றைய சூழலில் புலம்பெயர்ந்த வாழ்க்கை அதாவது ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு என்று செல்வது மிகவும் இயல்பாக உள்ளது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“ஆம்! நான்கூட புலம்பெயர்ந்த ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 2004ஆம் ஆண்டின் கடைசிப் பகுதிகளில் நாட்டைவிட்டு வெளியேற ஆரம்பித்தோம். மலேசியா, சிங்கப்பூர், துபாய் என இப்போது சென்னை பழகிக் கொண்டுவிட்டது. என்ன இருந்தாலும் சொந்த மண்ணில், சொந்த வீட்டில் வாழ்வதைப்போன்ற சுகமும், சொர்க்கமும் சொல்லில் அடங்காதவை.

இன்று ஈழத்தின் தமிழரில் பாதிப்பேர் புலம்பெயர்ந்து நாடு நாடாகத்தான் அலைகிறார்கள். இதில் சிலபேர் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ற இசைவுகளுடன் வாழப் பழகிக் கொண்டு விட்டார்கள். ஆனால், மீதிப்பேர் வாழ்வுரிமையற்று தகுதிக்கேற்ற தொழில்களைப் பெற முடியாமல் வீடுகள் அற்று அல்லலுறும் நிலை அவலமே."

“இதழியல் படித்த நீங்கள் ‘பூவரசி’ என்ற இதழை நடத்துகிறீர்கள் சரி? ஆனால் திரைப்படம் தயாரித்து இயக்கும் ஆர்வம் எப்படி வந்தது? அந்தப் பணி எந்தளவில் உள்ளது?”

“உண்மைதான்! சின்ன வயதிலிருந்தே இதுதான் செய்ய வேண்டும் என்றில்லாமல் கலையோடு மிகுந்த ஆர்வமும், சேர்ந்து இயங்குவதும் உண்டு. சில வீதி நாடகங்களைக் கூட தயாரித்திருக்கிறேன், விழிப்புணர்வு சார்ந்து.

எனக்கு இயல்பாகவே நாடகங்களைத் தயாரித்து நண்பர்களைச் சேர்த்து இயக்குவது, இசை நாடகங்களை அமைப்பது என இருந்தாலும், இந்த இடத்தில் என்னுடைய பாடசாலைத் தோழி சாறாவை நினைவு கூருகிறேன். அவள் என்னைக் களவுகளவாக படம் பார்க்க அழைப்பது மட்டுமின்றி அவளுடைய அப்பா அனுப்பி வைத்த விலையுயர்ந்த கமறாவை என்னிடம் கொடுப்பாள். நாங்கள் காடுமேடு, குளம், குட்டைகள் எனச் சுற்றியடிப்பதும், விதம் விதமாகப் பதிவு செய்வதும் என விளையாட்டாகவும், இனிமையாகவும் வகுப்புகளை கட் அடித்துச் சுற்றிய அந்த நாட்களை மறக்க முடியாது. 

என்னுடைய கலை இலக்கிய ஆர்வம் புத்தகம் எழுதுவது, பத்திரிகை எனவே சென்றுகொண்டிருந்தது. என்னுடைய அண்ணா 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் திரைப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்திருந்தார். ஜீவா நடித்த தெனாவட்டு, மனதோடு மழைக்காலம், புலி வருது போன்றவை அவர் தயாரித்த படங்களே! அப்போது என்னை அவர் சென்னைக்கு வந்து, இந்த தயாரிப்பு நிர்வாகத்தோடு திரைப்படப் பாடல்கள் எழுதப் பழகிக்கொள் என அழைத்தார். ஆனால் நான் அப்போது மறுத்துவிட்டேன். பின் 2007இல் சென்னைக்கு வந்திருந்தாலும் 2009 வரை எதிலும் ஈடுபாடு காட்டவில்லை.

சினிமா சார்ந்தவர்களை தொழில் சார்ந்து சந்திப்பதுண்டு. இதற்குப்பின் சில படங்களில் ஈழத்தமிழ் பேச சொல்லிக் கொடுப்பதற்கு அழைத்தார்கள். இயல்பான ஆர்வங்களும் தொடர்ந்து பாலுமகேந்திராவின் பயிற்சிப்பட்டறையும் என என்னையும் சினிமாவிற்குள் இழுத்துவிட்டது. முதலில் குறும்படம், ஆவணப்படங்கள் என்றுதான் இயங்கிக் கொண்டிருந்தேன்.

இப்போது ஈழம் சார்ந்த முழுநீளத் திரைப்படம் ஒன்றை எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். இதை ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் படப்பிடிப்பு செய்ய திட்டம். ஈழத்தின் திரைக்கலைஞர்கள், இந்திய திரைக்கலைஞர்கள் என்ற கூட்டு முயற்சியில் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஈழத்தைச் சேர்ந்த நடிகர் அபயன் இந்தப் படத்தில் ஒரு கதாநாயகனாகவும் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது”

தொடர்புக்கு: 9600131346 | eezhavani@gmail.com 

Wednesday, 10 December 2014

சொற்சிலம்பம் 1 - பேனாவும் பெண்ணும்

 சிந்தனைச் சிடுக்குகளில்
அருகருகே உருக்கொண்டு
பொருள் மருவச் செய்கிறார்கள்
ஒன்று போல் ஒன்றெனப் பல
ஒற்றுமைகள் நெய்கிறார்கள்

ஆங்கில ஒலியில்
முன்னது ‘பெண்’
தமிழ் ஒலியில்
பின்னது ‘பெண்’

தமிழில்
பேனாவை ‘கோல்’ என்பர்
ஆங்கிலத்தில்
பெண்ணை ‘கே(ர்)ள்’ என்பர்

பேனா இட்ட மை
அறிவை மயக்கும்
பெண் இட்ட மை
ஆளை மயக்கும்

பேனாவோடு
பள்ளி சேர்ந்தால்
கல்வியின்பம்
பெண்ணோடு
பள்ளி சேர்ந்தால்
கலவியின்பம்

பேனா கல்வியால்
கருப்பெறம்
பெண் கலவியால்
கருப்பெறும்

கரு வளர்ந்தால்
இருக்குமே பிரவசம்
பேனாவின் பிரசவம்
வெளியீடு
பெண்ணின் வெளியீடு
பிரசவம்

வாய்மை கொள்வது
பேனாவுக்கும்
தாய்மை கொள்வது
பெண்ணுக்கும்
பெருமைப் பேறுகள்

பேனாவுக்குக் கூரழகு
பெண்ணுக்கு மாரழகு
மூடி(க்) கொண்டு காத்தல்
இருவருக்கும் வழக்கம்

பேனாவுக்கு
கூரில் சுரக்கும்
பெண்ணுக்கு
மாரில் சுரக்கும்

வாய்மை ‘நிப்’பில்
சுரந்தால்
சிறந்த நூலாகும்
தாய்மை ‘நிப்பில்’
சுரந்தால்
சிறந்த பாலாகும்

பேனாவும் பெண்ணும்
ஆண்களின் சட்டைப்பையை
அநேகம் விரும்புவர்
ஆண்கூட அப்படித்தான்
பேனாவையும் பெண்ணையும்
நெஞ்சிலே தாங்கியிருப்பான்

காதல் பாட்டுக்கு
பேனாவும் பெண்ணும்
கட்டாயம் வேண்டும்

பேனா காதலை
வாசகமாக்கும்
பெண் காதலை
யாசகமாக்குவாள்

பேனா பா முடிக்கும்
பெண் பூ முடிப்பாள்

பேனா
உதட்டில் தொட்டாலும்
பெண்
உதட்டில் தொட்டாலும்
சாயமாகும் ஜாக்கிரதை

வளைவு நெளிவுகள்
பெண்ணில் பார்க்கலாம்
பேனாவில் வார்க்கலாம்

புதுப்பேனா பளபளப்பு
புதுப் பெண் தளதளப்பு

பேனா வைத்த பொட்டு
புள்ளி
பெண் வைத்த புள்ளி
பொட்டு

பேனாவை பெண்ணை
பாங்காய்ப் பேணுதல்
ஏட்டுக்காரருக்கும்
வீட்டுக்காரருக்கும்
தலைக்கடமை
ஏனெனில்
பேனா அழுதால்
கரு ‘மை’ கசியும்
பெண் அழுதால்
பெருமை கசியும்

பேனா புத்தி
பெண் சத்தி
புத்தியின்றி
எவனுமில்லை
சத்தியின்றி
சிவனுமில்லை

பேனாக்களோடு
அலைபவர்
செய்தியாளர் என்றறிக
பெண்களோடு
அலைபவர்
செய்தியாவர் என்றறிக

பேனாவும் பெண்ணும்
சாம்ராஜ்யம் சரித்ததாக
சரித்திரத்தில் கதைகளுண்டு

பேனா
பெண்ணைப் பற்றி
எழுதினால்
பெண்ணியம்
பெண்
பேனாவைப் பற்றி
எழுதினால்
கண்ணியம்

பேனாவைத் தூற்றினும்
பெண்ணைத் தூற்றினும்
தேசம்தான்
துப்பற்றுப் போகும்

பேனா பிடித்த பெண்ணும்
பெண் பிடித்த பேனாவும்
அதிகாரம் பெறுவது
அகிலத்திற்கு
அவசியம் & அவசரம்

- தாண்டவக்கோன், திருப்பூர்
கிழக்கு வாசல் உதயம் அக்டோபர் 2012 இதழில்

துன்பமே ஆற்றலைத் தரும்

ஒரு நாள் காலை நேரம். ஓர் அவசர அலுவல் காரணமாக என் நெருங்கிய நண்பரைப் பார்க்கப் போயிருந்தேன். வியாபாரத்தில் கொடிக் கட்டிப் பறக்கும் இளைஞர் அவர். என்னைப் பார்த்ததும் கடைவாசலுக்கு வந்து விட்டார். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளும், அலுவலகம் செல்வோரும் என்று கடைத்தெரு பரபரப்பாக இருந்தது. நண்பரிடம் செய்தி சொல்லப் போகும் தருணத்தில் கூட்ட நெரிசலில் முழி பிதுங்கியபடி நகரப்பேருந்து ஒன்று நகர்ந்தபடி எங்களைக் கடக்க முயன்றது.

பேருந்துக்குள் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பையன் நண்பரைப் பார்த்து,
“சார்! நல்லா இருக்கிங்களா?” என்று கையசைத்தான்.

அவனைப் பார்த்ததும் முகம் மலர “அடடே நீயா! நல்லா இருக்கியா? பத்திரமா போயிட்டு வா!” என்று பதிலுக்குக் கையாட்டினார்.

அதுமட்டுமல்ல, பேருந்து கொஞ்சம் தூரம் போகும் வரை அந்தப் பக்கமே பார்த்திருந்துவிட்டு அப்புறம்தான், “ஹும், சொல்லுங்க!” என்றார் என்னைப் பார்த்து.

அவர் மனஓட்டத்தைக் கொஞ்சம் புரிந்துகொண்டு “யார் அந்தப் பையன்?” என்றேன்.

“வருங்காலத்தில் மிகப்பெரிய ஆளா வரப்போகிற அசகாயச் சூரன் சார் அவன்!” நண்பரின் அந்த அசத்தலான பதிலைக் கேட்டு நானும் கொஞ்சம் மிரண்டு போனேன்.

“என்னங்க இப்படிச் சொல்றீங்க?”

“ஆமா சார்! ஒரு நாள் கடைக்குள் நுழைந்த இவன் நேரே எங்கிட்டே வந்தான். ‘சார்! ஒரு பத்து ‘காது கப்பு’ கொடுங்க சார். உங்க கடை வாசலியே நின்னு வித்துட்டுப் பணத்தைக் கொடுத்திடறேன்!’ அப்படீன்னான். அது கடுமையான பனிக்காலம்! ‘ஓ! அல்வாவுக்கே அல்வாவா! அதிருக்கட்டும்! படிக்கிற பையன்தானே, நீ!’ என்றேன். ‘ஆமா சார்! ஏழாவது படிக்கிறேன் சார். வீட்ல அப்பா, அம்மா, தங்கச்சி, நாலு பேரு. ஆத்தங்கரையிலே குடியிருக்கோம். அம்மா வீட்டு வேலைக்குப் போகும். தங்கச்சி ரெண்டாங் கிளாஸ் படிக்குது’ என்றான். ‘அப்பா?’ என்றதும், ‘குடிச்சிட்டு வந்து அம்மாகிட்ட சண்டை போடறதும், அலங்கோலமா போதையில படுத்துத் தூங்குறதுந்தான் அப்பாவோட வேலை. அம்மா ரொம்பக் கஷ்டப்படுது சார்! அதுக்கு ஏதாவது உதவியா இருக்கணும் சார். பத்து ‘காது கப்பு’ கொடுங்க சார். பணம் இல்லே சார். வித்துட்டுக் உடனே கொடுத்திடறேன் சார்’ அப்படீன்னான்!”

“அட! இந்தச் சின்ன வயசுல எப்படி ஒரு யோசனை பாருங்க!”

“உடனே அவன்கிட்டே பத்து காது கப்புக் கொடுக்கச் சொன்னேன். நாங்க விக்கிறது, ஒண்ணு அஞ்சு ரூபா. அதையே எங்கக் கடை வாசல்லேயே நின்னு பத்து ரூபா, பத்து ரூபான்னு கூவி, பத்தையும் ஒரு மணி நேரத்திலே வித்துட்டு, ‘இந்தாங்க சார்! உங்க அம்பது ரூபா பணம்’னு கொடுத்தான். அசந்து போயிட்டேன்! ‘எங்க அடக்க விலையிலே கொஞ்சம் லாபம் வச்சுக்கிட்டேன். ஒண்ணு நாலு ரூபாதான் ஆகுது. இந்தா மீதம் பத்து ரூபா’ன்னு நாப்பது ரூபாய் மட்டும் வாங்கிக்கிட்டேன். அவனுக்கு மகிழ்ச்சி தாங்கல. அப்பைக்கப்போ வருவான். எதிர்காலத்திலே இவன் பெரிய ஆளா வரப்போறான்!”
நண்பர் மனம் நெகிழ்ந்து சொன்னதைக்கேட்டு எனக்குத் தோன்றியது இதுதான்!

‘அளவற்ற துன்பம், அளப்பரிய ஆற்றலைப் பரிசாகத் தரும் போலும்!’

- உத்தமசோழன்
ஜூன் 2014 'என் வாசலின் வழியே' பகுதியில் வெளிவந்தது