Monday, 26 September 2016

யோசித்திருந்தால் வீசியிருக்கவே மாட்டார்!

ன்று காலை ஒன்பது மணியிருக்கும். வெள்ளை வண்ண ஸ்கூட்டரில் ஏதோ வெள்ளைக் குதிரை மீதமர்ந்து பயணிக்கும் பரவசத்தோடு மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தேன். அதிகச் சேதத்தைச் சந்திக்காத சாலை அது. அதனால் வாகனங்கள் ஒவ்வொன்றும் ‘பாயும் புலிகளாக’ பாய்ந்து கொண்டேயிருந்தன.

ஒரு பைக் என்னை முந்திக்கொண்டு சென்றது. அந்தப் பைக்கில் மொத்தக் குடும்பமும் அமர்ந்திருந்தது. கணவன் மனைவி இருவருமே பெருத்த உடம்பு. இரண்டு பிள்ளைகள். அவர்களும் சளைத்தவர்கள் அல்ல. நெருக்கியடித்துக் கொண்டே அமர்ந்திருந்தனர். முன்னால் அமர்ந்திருந்த பிள்ளை கையைக் குறுக்கே நெடுக்கே நீட்டினாலே பைக் ஓட்டுபவர் தடுமாறிப் போவார். ஆனாலும் அவர் வேகமாகவே போய்க்கொண்டிருந்தார். ‘ஆபத்தை மடியிலே கட்டிக்கிட்டு போகிற மாதிரி இப்படிப் போகணுமா’ என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ‘அதெல்லாம் அவங்களுக்குத் தெரியும். நீ வண்டியை ஒழுங்கா ஓட்டிக்கிட்டுப் போ! அது போதும்!’ என் புத்தி என்னை எச்சரித்தது.
எங்களைத் தாண்டிக் கொண்டு ஒரு தனியார் பேருந்து முன்னால் பறந்தது. ‘ஏதோ இவங்க போறதுக்காக மட்டுமே ரோடு போட்ட மாதிரியில்ல பறக்கிறாங்க!’ என்று எரிச்சலோடு முணுமுணுத்துக்கொண்டேன்.

அந்த நேரத்தில் முன்னால் குடும்பத்துடன் போய்க்கொண்டிருந்த பைக் பெருத்த அலறலுடன் கீழே சாய்ந்தது. ஓட்டியவர் ஒரு பக்கம், பைக் ஒரு பக்கம், பிள்ளைகள் ஒரு பக்கம், அந்த அம்மா ஒரு பக்கம் எனச் சாலையில் சிதறி விழுந்து வலி தாங்க முடியாமல் அலறினர். பதற்றமடைந்த நான் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு அவசர அவசரமாய் ஓடிப்போய்ப் பிள்ளைகளைத் தூக்கி விட்டேன். அதற்குள் எதிரும், புதிருமாகப் பைக்குகளில் வந்தவர்கள் ஓடிவந்து அவரையும், அந்த அம்மாவையும் தூக்கிவிட்டுக் கைகால்களைத் தடவிக் கொடுத்தனர். நல்லவேளை! சின்னஞ்சிறு சிராய்ப்புகளைத் தவிரப் பெருத்த காயம் ஏதும் ஏற்படவில்லை.

என்ன நடந்தது? உடம்பு முழுக்க வெடவெடவென நடுங்க பைக் ஓட்டிய அந்தக் குடும்பத் தலைவர் குரல் நடுங்க அச்சம் மாறாமல் சொன்னார். “இப்போ போச்சே.. அந்தப் பஸ்ஸின் ஜன்னல் வழியே எதையோ தின்னுட்டு காலியான ‘பிளாஸ்டிக் கேரி பேக்கை’ யாரோ தூக்கி வெளியே வீசியிருக்காங்க. அது பறந்து வந்து பின்னால போய்க்கொண்டிருந்த என் முகத்தில படாருன்னு மூடிடுச்சு. நான் தடுமாறிப் பைக்கைக் கீழே விட்டுட்டேன். நல்லவேளை! எங்க பின்னாடி அந்தப் பஸ் மாதிரியே வேற பஸ்ஸோ, லாரியோ, வேகமா வந்திருந்தா ஒட்டுமொத்தக் குடும்பத்தோட மொத்தமா நாங்க போய்ச் சேர்ந்திருப்போம்” நிம்மதி பெருமூச்சு விட்டார், அந்தக் குடும்பத் தலைவர்.

பேருந்திலிருந்து கேரி பேக்கை வீசியெறிந்தவர், அந்தப் பிளாஸ்டிக் பையால் பின்னால் பைக்கில் வருபவருக்கு இப்படி ஓர் ஆபத்து ஏற்படுத்தும் என்று யோசித்திருப்பாரா? நம்மில் பலர் எதைப் பற்றியும் சரிவர யோசிக்காததால்தானே விதவிதமான சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறோம். கையில் இருந்த காலிப் பையைத் தூக்கி வெளியே போடவேண்டும், அவருக்கு வேண்டியது அவ்வளவுதான்! யோசித்திருந்தால் வீசியிருக்கவே மாட்டார்.

யோசிப்போம்!

- உத்தமசோழன்
கிழக்கு வாசல் உதயம் ஜனவரி 2016 இதழில் வெளிவந்த 'என் வாசலின் வழியே' பகுதியில் வந்த செய்தி

Wednesday, 15 April 2015

"உலகின் உன்னதங்கள் பெண்களே!"

கிழக்கு வாசல் உதயம் மார்ச் 2015 இதழில் வெளிவந்த கவிஞர் ஈழவாணியுடனான ஒரு சந்திப்பு!


"மங்கையராய்ப் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா! அப்படியா?”

“இந்தக் கருத்தை மறுப்பதற்கேதுமில்லை. பூமியை, உலகை ஆளும் பெண் ஒவ்வொரு விடயத்தையும் தன்னகப்படுத்திக் கொள்கிறாள். குறிப்பாக படைக்கும் சத்தியை அதிகமாகக் கொண்டிருப்பதால். பாசம், பற்று என்ற வலைக்குள் இலகுவாகச் சிக்கிக்கொள்வதால் எதிர்ப்பாலினரிடம் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கியும் கொள்கிறார்கள். இதைத் தமக்குச் சாதகமாக்கி இடையறாத துன்பத்தையும், இம்சைகளையும் கொடுத்து இழிவுபடுத்தி, ‘போகத்துக்கு மட்டும் பெண், வீட்டுக்குள்ளே மட்டுமே பெண்’, இவ்வாறான கருத்துக்களைத் திணிக்கிறார்கள்.

ஒரு உயிரைப் பெற்றெடுக்கக்கூடிய பெண்மை, அதைச் சுமந்து வலிகள், துன்பங்களைத் தாங்கி, உலகில் இன்னொரு தனியாளாக வாழ்வதற்கு வழிகளையும் தேவைகளையும் நிறைவுற அமைத்துக்கொடுக்கிறாளே பெண்! இத்தனை சக்தியைக் கொண்ட மங்கையாய்ப் பிறப்பதற்கு பாவம் செய்துவிட்டால் எப்படி முடியும்?

இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் சாதிக்கிறார்கள். விமானம் ஓட்டுவதிலிருந்து வீட்டில் புதிது புதிதானவற்றைக் கண்டுபிடித்து, மனித வாழ்க்கையின் மகா உன்னத மகிழ்ச்சியை உணர்த்தி மகிழ்வதற்காக. ஏன் கட்டப்பஞ்சாயத்து நடத்தியும் ஓடஓட விரட்டியடித்து ஒதுக்க முயலும் கூட்டத்துக்குள்ளும் எதிர்த்து நின்று வாழ்ந்து சாதிக்கும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். ஈழப்போராட்டத்திலே தாய்மண்ணைக் காக்க தமது எதிர்காலத்தையும், உயிரையும் துச்சமாய் மதித்துப் போராடி சாதனையோடு வீரச்சாவடைந்த மங்கையரெல்லாம் உலக வரலாற்றின் உன்னதங்களாகவே போற்றப்படுவர்.”

“உங்களுக்குப் பிடித்த உங்கள் கவிதை எது? ஏன்?"

அப்பா 
'என்னைக் காட்டிய
வண்ணக் கண்ணாடி
என்னை நானுணர்ந்து
விம்பம் பார்க்கையில்
நழுவி உடைந்துபோனது
ஓருருவமான மாயையில்
மறைந்திருந்த என்னை
ஆயிரம் சக்திகளாய்; உணர்த்தியவர்
உடைந்த சில்லங்களில்
என் விம்பங்கள்'

அரச மரங்களே
'வன்னியின் வளமிகு காடுகளே
உமக்கோர் அறிவிப்பு 
தரமிகு உம் குடும்பத்தில்
எழில்மிகு அரச மரங்களுண்டோ
யாழின் சுண்ணாம்புச் சுவையூறிச்
செழித்த மரங்களே
உண்டோ உம்மிடமும்
உண்டெனில் 
அவசர அறிக்கையில்
கொலைத்தீர்ப்பிடுங்கள் ஏனெனில்
உம்மண்ணை ஆக்கிரமிக்க
அரசமரநிழல் பாத்தலைகிறான் புத்தன்.'

கவிதை எழுதும் தருணங்கள் எனக்கு மிகப் பிடித்தமானவையும் வித்தியாசமானவையும்கூட. எல்லா நேரங்களிலும் எழுதுவதில்லை. எழுதத் தோன்றும் அந்தத் தருணத்தில் அவற்றை எழுதவில்லை என்றால் எனக்கு மறந்து போய்விடும். ஆனால், எல்லாச் சந்தர்ப்பத்திலும் தோன்றுவதை எழுதிவிட முடிவதில்லை.

கவிதைகளைப் பெரும்பாலும் ரசித்து அனுபவித்தே எழுதியிருப்பேன். அதனால், அவற்றை ரசனையோடு நானே திரும்பத் திரும்பப் படித்துப் பார்ப்பதுமுண்டு. எல்லாமே என் குழந்தைகளே!

ஆனாலும், இங்கு மேலே கூறிய கவிதைகள் வித்தியாசமானவை. அப்பாவைப் பற்றிய கவிதை ஒன்று. சிறுவயதிலேயே அப்பா இறந்துவிட்டார். என்னை ஒரு மனுசியாய், மகளாய், பெண்ணாய், சமூகத்தில் ஒரு பிரஜையாய் அறியப்படும்போது அவர் நிஜமான உருவத்தில் என்னோடு இருக்கவில்லை. ஆனால், மாய உலகில் என்னோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன்.

அரசமரங்கள் பற்றிய அடுத்த கவிதை இலங்கையில் முக்கியமான இடங்களில் நிற்கும் அரசமரங்களில் புத்தர் குடிபூர விகாரைகள் உருவாகிவிடும். 2009 ஈழப்போர் நிறைவடைந்த பின்னர் அரசமரம் நிற்கிற தமிழர் பகுதிகளில் எல்லாம் புத்தரைக் கொணர்ந்து உட்காரவைத்து தம் விகாரைகளை அமைத்துக்கொள்கிறார்கள் சிங்களர். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் இயலாமையின் வெளிப்பாடாய் வந்த அக்கவிதையும் எப்போதும் மனதில் நின்று கொண்டேயிருக்கிறது.”

“நீங்கள் ஒரு கவிஞர். உங்களுக்கு மற்ற யாருடைய கவிதைகள் பிடிக்கும்?”

“கவிதைகளை எனக்கு இன்னாருடையது என்பதற்காகப் பிடிப்பதில்லை. படித்தவுடன் சில கவிதைகள் பட்டென மனதில் ஒட்டிக்கொள்கிறது. கவிதையின் கருத்து, நயம், சந்தம், சூழ்நிலைகள் என்பன இவற்றில் செல்வாக்கு செலுத்துவதாக நான் நினைக்கிறேன். சில கவிதைகளில் கருத்திருக்காது. அந்த நேரத்து மனநிலையில் அது ஒட்டிக்கொள்ளும். சில சமயங்களில் கவிதைகள் மாய உலகில் சில நிமிட சஞ்சாரிப்பிற்கான திறவுகோல்களாகக் கூட இருக்கிறது.

ஆழியாளுடைய கவிதைகள், புதுவை ரத்னதுரையுடைய கவிதைகள், கவிஞர் காசி ஆனந்தனுடைய கவிதைகள், அம்புலியுடைய கவிதைகள், தா. பாலகணேசனுடைய கவிதைகள், சிவரமணியுடையவை, பஹிமாஜகானுடைய கவிதைகள் என நிறையப் பிடிக்கும். நான் கூறிய இவர்கள் எல்லாம் ஈழத்துக் கவிஞர்கள். 

தமிழ்நாட்டுக் கவிஞர்கள் பல பேருடையவை எனக்குப் பிடிக்கும். அவற்றைத் தனித்தனியே சொல்லிப் இங்கு இடம் போதாது.

அண்மையில் எனக்குப் பிடித்த கவிதை ஒன்றைப் படித்தேன். அது தீபச்செல்வனுடையதே!

‘இறுதிநாள் வழியில் தொலைந்தவர்கள்
வழியில் தொலைந்த ஆடுகளின் கதைகளால்
நிறைந்துபோயிருக்கிறது இந்த நாள்
இந்த வானொலி வழி தவறியவர்களை
இன்னும் தேடிக்கொண்டிருக்கிற இரவு நிகழ்ச்சியை
ஒலிபரப்பிக்கொண்டிருக்கிறது
கைகளுக்குள்ளிலிருந்து எப்படி நழுவி விழுந்தீர்கள்
என்று ஒவ்வொரு தாய்மார்களும்
இரவு நிகழ்ச்சியில் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்
இறுதி நாளிலிருந்து இன்று வரை
உனதம்மா உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறாள்.
இப்படியாக அந்தக் கவிதை தொடர்கிறது.’ ”

“பதிப்புலக முன்னோடி எஸ்.பொவின் ‘மித்ர பதிப்பகம்’ உங்கள் பொறுப்பில் உள்ளது. அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா? எஸ்.பொ. என்கிற எஸ். பொன்னுதுரை உங்கள் பார்வையில் எப்படி?"

“எஸ்.பொ ஈழத்தில், தமிழ்நாட்டில் மட்டுமில்லாது உலகளாவிய தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் மிகத் தொன்மையான எழுத்தாளுமையாவார். தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகளை ஆழமாக அறிந்து புலமையோடு நவீன இலக்கியத்தைப் படைத்தவர். அதுமட்டுமின்றி ஆங்கிலப் புலமை கொண்டவர். இதனால் சர்வதேச இலக்கியங்களிலும், தத்துவ நூல்களிலும் பயிற்சியும் தேர்ச்சியுமுடையவர். இதனாலேயே சர்வதேச மட்டத்திலான இலக்கியங்களைப் படைக்கும் மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ முடிந்திருக்கிறது. பல மொழிபெயர்ப்பு நூல்களைத் தந்திருக்கிறார். மேலும், சிறுகதைகள், தன் வரலாற்று நூல், அரசியல் - பண்பாட்டுக் கட்டுரைகள் தமிழ் இலக்கண ஆய்வுக் கட்டுரைகள் விமர்சன நூல்கள், நாடகங்கள், உரைச் சித்திரங்கள் கவிதைகள் என எல்லாத் துறையிலும் விளங்கியவர்.


இவருடைய நூல்கள் பலதரப்பட்டவை. மனிதனை ஆட்டிப் படைக்கும் காமத்தையும், யாழ்ப்பாணத்து வாழ்க்கையினையும், மனித உணர்வுகளின் அடியாழத்தையும் மிக இயல்பாகவும், உண்மையாகவும் அணுகியிருக்கிறது சடங்கு என்ற நாவல். தொடர்ச்சியாக நனைவிடை தோய்தல், பூ, கீதையின் நிழலில், இனி, ஈடு, கேள்விக்குறி, அப்பாவும் மகனும், உறவுகள், தேடல், முறுவல், மத்தாப்பூ, சதுரங்கம், வலைமுள், தீதும் நன்றும், மணிமகுடம் போன்ற பல நாவல்களோடு எஸ்.பொ கதைகள் தொகுக்கப்பட்டும் வந்திருக்கிறது. யாரும் சொல்லத் துணியாத, வெளிவராத பல அரசியல் நாடகங்களை, அந்தரங்கத் தொடர்புகளைப் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார். எஸ்.பொ.வின் படைப்புகள் பல. ஒவ்வொன்றும் வாழ்வின் ஒவ்வொரு கோலங்கள்.

மித்ரவும் எஸ்.பொவுடைய நூல் பணிகளும் மிக ஆழமானதாகவும், ஈழத்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்திருக்கிறது. 2013ஆம் ஆண்டிலிருந்து நானே மித்ரவை நடத்திக்கொண்டிருக்கிறேன். அவருடைய வயோதிமையும், தொடர்ந்து சென்னையில் இருக்க முடியாமையும்  மித்ரவை யாராவது ஒருவரிடம் ஒப்படைப்பதற்குப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தது. நான் ஆவணப்படம் எடுப்பதற்காக அக்காலப் பகுதியில் எஸ்.பொ.வை வந்து சந்தித்துப் பேசுவேன். ‘பூவரசி’ காலாண்டிதழ், நூல்கள் என நான் பதிப்புத் துறையிலும் இருந்ததால், என்னுடைய செயற் பாடுகளில் நம்பிக்கையுற்றிருந்ததாலும் தன்னுடைய எழுத்து வாரிசாக என்னை அறிவித்திருந்தார். மித்ரவையும் தொடர்ந்து நடத்தும் தகுதியும், திறமையும் எனக்கு இருப்பதாகக் கருதி என்னிடம் அதை ஒப்படைத்துவிட்டார்.”

“இன்றைய சூழலில் புலம்பெயர்ந்த வாழ்க்கை அதாவது ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு என்று செல்வது மிகவும் இயல்பாக உள்ளது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“ஆம்! நான்கூட புலம்பெயர்ந்த ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 2004ஆம் ஆண்டின் கடைசிப் பகுதிகளில் நாட்டைவிட்டு வெளியேற ஆரம்பித்தோம். மலேசியா, சிங்கப்பூர், துபாய் என இப்போது சென்னை பழகிக் கொண்டுவிட்டது. என்ன இருந்தாலும் சொந்த மண்ணில், சொந்த வீட்டில் வாழ்வதைப்போன்ற சுகமும், சொர்க்கமும் சொல்லில் அடங்காதவை.

இன்று ஈழத்தின் தமிழரில் பாதிப்பேர் புலம்பெயர்ந்து நாடு நாடாகத்தான் அலைகிறார்கள். இதில் சிலபேர் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ற இசைவுகளுடன் வாழப் பழகிக் கொண்டு விட்டார்கள். ஆனால், மீதிப்பேர் வாழ்வுரிமையற்று தகுதிக்கேற்ற தொழில்களைப் பெற முடியாமல் வீடுகள் அற்று அல்லலுறும் நிலை அவலமே."

“இதழியல் படித்த நீங்கள் ‘பூவரசி’ என்ற இதழை நடத்துகிறீர்கள் சரி? ஆனால் திரைப்படம் தயாரித்து இயக்கும் ஆர்வம் எப்படி வந்தது? அந்தப் பணி எந்தளவில் உள்ளது?”

“உண்மைதான்! சின்ன வயதிலிருந்தே இதுதான் செய்ய வேண்டும் என்றில்லாமல் கலையோடு மிகுந்த ஆர்வமும், சேர்ந்து இயங்குவதும் உண்டு. சில வீதி நாடகங்களைக் கூட தயாரித்திருக்கிறேன், விழிப்புணர்வு சார்ந்து.

எனக்கு இயல்பாகவே நாடகங்களைத் தயாரித்து நண்பர்களைச் சேர்த்து இயக்குவது, இசை நாடகங்களை அமைப்பது என இருந்தாலும், இந்த இடத்தில் என்னுடைய பாடசாலைத் தோழி சாறாவை நினைவு கூருகிறேன். அவள் என்னைக் களவுகளவாக படம் பார்க்க அழைப்பது மட்டுமின்றி அவளுடைய அப்பா அனுப்பி வைத்த விலையுயர்ந்த கமறாவை என்னிடம் கொடுப்பாள். நாங்கள் காடுமேடு, குளம், குட்டைகள் எனச் சுற்றியடிப்பதும், விதம் விதமாகப் பதிவு செய்வதும் என விளையாட்டாகவும், இனிமையாகவும் வகுப்புகளை கட் அடித்துச் சுற்றிய அந்த நாட்களை மறக்க முடியாது. 

என்னுடைய கலை இலக்கிய ஆர்வம் புத்தகம் எழுதுவது, பத்திரிகை எனவே சென்றுகொண்டிருந்தது. என்னுடைய அண்ணா 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் திரைப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்திருந்தார். ஜீவா நடித்த தெனாவட்டு, மனதோடு மழைக்காலம், புலி வருது போன்றவை அவர் தயாரித்த படங்களே! அப்போது என்னை அவர் சென்னைக்கு வந்து, இந்த தயாரிப்பு நிர்வாகத்தோடு திரைப்படப் பாடல்கள் எழுதப் பழகிக்கொள் என அழைத்தார். ஆனால் நான் அப்போது மறுத்துவிட்டேன். பின் 2007இல் சென்னைக்கு வந்திருந்தாலும் 2009 வரை எதிலும் ஈடுபாடு காட்டவில்லை.

சினிமா சார்ந்தவர்களை தொழில் சார்ந்து சந்திப்பதுண்டு. இதற்குப்பின் சில படங்களில் ஈழத்தமிழ் பேச சொல்லிக் கொடுப்பதற்கு அழைத்தார்கள். இயல்பான ஆர்வங்களும் தொடர்ந்து பாலுமகேந்திராவின் பயிற்சிப்பட்டறையும் என என்னையும் சினிமாவிற்குள் இழுத்துவிட்டது. முதலில் குறும்படம், ஆவணப்படங்கள் என்றுதான் இயங்கிக் கொண்டிருந்தேன்.

இப்போது ஈழம் சார்ந்த முழுநீளத் திரைப்படம் ஒன்றை எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். இதை ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் படப்பிடிப்பு செய்ய திட்டம். ஈழத்தின் திரைக்கலைஞர்கள், இந்திய திரைக்கலைஞர்கள் என்ற கூட்டு முயற்சியில் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஈழத்தைச் சேர்ந்த நடிகர் அபயன் இந்தப் படத்தில் ஒரு கதாநாயகனாகவும் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது”

தொடர்புக்கு: 9600131346 | eezhavani@gmail.com 

Wednesday, 10 December 2014

சொற்சிலம்பம் 1 - பேனாவும் பெண்ணும்

 சிந்தனைச் சிடுக்குகளில்
அருகருகே உருக்கொண்டு
பொருள் மருவச் செய்கிறார்கள்
ஒன்று போல் ஒன்றெனப் பல
ஒற்றுமைகள் நெய்கிறார்கள்

ஆங்கில ஒலியில்
முன்னது ‘பெண்’
தமிழ் ஒலியில்
பின்னது ‘பெண்’

தமிழில்
பேனாவை ‘கோல்’ என்பர்
ஆங்கிலத்தில்
பெண்ணை ‘கே(ர்)ள்’ என்பர்

பேனா இட்ட மை
அறிவை மயக்கும்
பெண் இட்ட மை
ஆளை மயக்கும்

பேனாவோடு
பள்ளி சேர்ந்தால்
கல்வியின்பம்
பெண்ணோடு
பள்ளி சேர்ந்தால்
கலவியின்பம்

பேனா கல்வியால்
கருப்பெறம்
பெண் கலவியால்
கருப்பெறும்

கரு வளர்ந்தால்
இருக்குமே பிரவசம்
பேனாவின் பிரசவம்
வெளியீடு
பெண்ணின் வெளியீடு
பிரசவம்

வாய்மை கொள்வது
பேனாவுக்கும்
தாய்மை கொள்வது
பெண்ணுக்கும்
பெருமைப் பேறுகள்

பேனாவுக்குக் கூரழகு
பெண்ணுக்கு மாரழகு
மூடி(க்) கொண்டு காத்தல்
இருவருக்கும் வழக்கம்

பேனாவுக்கு
கூரில் சுரக்கும்
பெண்ணுக்கு
மாரில் சுரக்கும்

வாய்மை ‘நிப்’பில்
சுரந்தால்
சிறந்த நூலாகும்
தாய்மை ‘நிப்பில்’
சுரந்தால்
சிறந்த பாலாகும்

பேனாவும் பெண்ணும்
ஆண்களின் சட்டைப்பையை
அநேகம் விரும்புவர்
ஆண்கூட அப்படித்தான்
பேனாவையும் பெண்ணையும்
நெஞ்சிலே தாங்கியிருப்பான்

காதல் பாட்டுக்கு
பேனாவும் பெண்ணும்
கட்டாயம் வேண்டும்

பேனா காதலை
வாசகமாக்கும்
பெண் காதலை
யாசகமாக்குவாள்

பேனா பா முடிக்கும்
பெண் பூ முடிப்பாள்

பேனா
உதட்டில் தொட்டாலும்
பெண்
உதட்டில் தொட்டாலும்
சாயமாகும் ஜாக்கிரதை

வளைவு நெளிவுகள்
பெண்ணில் பார்க்கலாம்
பேனாவில் வார்க்கலாம்

புதுப்பேனா பளபளப்பு
புதுப் பெண் தளதளப்பு

பேனா வைத்த பொட்டு
புள்ளி
பெண் வைத்த புள்ளி
பொட்டு

பேனாவை பெண்ணை
பாங்காய்ப் பேணுதல்
ஏட்டுக்காரருக்கும்
வீட்டுக்காரருக்கும்
தலைக்கடமை
ஏனெனில்
பேனா அழுதால்
கரு ‘மை’ கசியும்
பெண் அழுதால்
பெருமை கசியும்

பேனா புத்தி
பெண் சத்தி
புத்தியின்றி
எவனுமில்லை
சத்தியின்றி
சிவனுமில்லை

பேனாக்களோடு
அலைபவர்
செய்தியாளர் என்றறிக
பெண்களோடு
அலைபவர்
செய்தியாவர் என்றறிக

பேனாவும் பெண்ணும்
சாம்ராஜ்யம் சரித்ததாக
சரித்திரத்தில் கதைகளுண்டு

பேனா
பெண்ணைப் பற்றி
எழுதினால்
பெண்ணியம்
பெண்
பேனாவைப் பற்றி
எழுதினால்
கண்ணியம்

பேனாவைத் தூற்றினும்
பெண்ணைத் தூற்றினும்
தேசம்தான்
துப்பற்றுப் போகும்

பேனா பிடித்த பெண்ணும்
பெண் பிடித்த பேனாவும்
அதிகாரம் பெறுவது
அகிலத்திற்கு
அவசியம் & அவசரம்

- தாண்டவக்கோன், திருப்பூர்
கிழக்கு வாசல் உதயம் அக்டோபர் 2012 இதழில்

துன்பமே ஆற்றலைத் தரும்

ஒரு நாள் காலை நேரம். ஓர் அவசர அலுவல் காரணமாக என் நெருங்கிய நண்பரைப் பார்க்கப் போயிருந்தேன். வியாபாரத்தில் கொடிக் கட்டிப் பறக்கும் இளைஞர் அவர். என்னைப் பார்த்ததும் கடைவாசலுக்கு வந்து விட்டார். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளும், அலுவலகம் செல்வோரும் என்று கடைத்தெரு பரபரப்பாக இருந்தது. நண்பரிடம் செய்தி சொல்லப் போகும் தருணத்தில் கூட்ட நெரிசலில் முழி பிதுங்கியபடி நகரப்பேருந்து ஒன்று நகர்ந்தபடி எங்களைக் கடக்க முயன்றது.

பேருந்துக்குள் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பையன் நண்பரைப் பார்த்து,
“சார்! நல்லா இருக்கிங்களா?” என்று கையசைத்தான்.

அவனைப் பார்த்ததும் முகம் மலர “அடடே நீயா! நல்லா இருக்கியா? பத்திரமா போயிட்டு வா!” என்று பதிலுக்குக் கையாட்டினார்.

அதுமட்டுமல்ல, பேருந்து கொஞ்சம் தூரம் போகும் வரை அந்தப் பக்கமே பார்த்திருந்துவிட்டு அப்புறம்தான், “ஹும், சொல்லுங்க!” என்றார் என்னைப் பார்த்து.

அவர் மனஓட்டத்தைக் கொஞ்சம் புரிந்துகொண்டு “யார் அந்தப் பையன்?” என்றேன்.

“வருங்காலத்தில் மிகப்பெரிய ஆளா வரப்போகிற அசகாயச் சூரன் சார் அவன்!” நண்பரின் அந்த அசத்தலான பதிலைக் கேட்டு நானும் கொஞ்சம் மிரண்டு போனேன்.

“என்னங்க இப்படிச் சொல்றீங்க?”

“ஆமா சார்! ஒரு நாள் கடைக்குள் நுழைந்த இவன் நேரே எங்கிட்டே வந்தான். ‘சார்! ஒரு பத்து ‘காது கப்பு’ கொடுங்க சார். உங்க கடை வாசலியே நின்னு வித்துட்டுப் பணத்தைக் கொடுத்திடறேன்!’ அப்படீன்னான். அது கடுமையான பனிக்காலம்! ‘ஓ! அல்வாவுக்கே அல்வாவா! அதிருக்கட்டும்! படிக்கிற பையன்தானே, நீ!’ என்றேன். ‘ஆமா சார்! ஏழாவது படிக்கிறேன் சார். வீட்ல அப்பா, அம்மா, தங்கச்சி, நாலு பேரு. ஆத்தங்கரையிலே குடியிருக்கோம். அம்மா வீட்டு வேலைக்குப் போகும். தங்கச்சி ரெண்டாங் கிளாஸ் படிக்குது’ என்றான். ‘அப்பா?’ என்றதும், ‘குடிச்சிட்டு வந்து அம்மாகிட்ட சண்டை போடறதும், அலங்கோலமா போதையில படுத்துத் தூங்குறதுந்தான் அப்பாவோட வேலை. அம்மா ரொம்பக் கஷ்டப்படுது சார்! அதுக்கு ஏதாவது உதவியா இருக்கணும் சார். பத்து ‘காது கப்பு’ கொடுங்க சார். பணம் இல்லே சார். வித்துட்டுக் உடனே கொடுத்திடறேன் சார்’ அப்படீன்னான்!”

“அட! இந்தச் சின்ன வயசுல எப்படி ஒரு யோசனை பாருங்க!”

“உடனே அவன்கிட்டே பத்து காது கப்புக் கொடுக்கச் சொன்னேன். நாங்க விக்கிறது, ஒண்ணு அஞ்சு ரூபா. அதையே எங்கக் கடை வாசல்லேயே நின்னு பத்து ரூபா, பத்து ரூபான்னு கூவி, பத்தையும் ஒரு மணி நேரத்திலே வித்துட்டு, ‘இந்தாங்க சார்! உங்க அம்பது ரூபா பணம்’னு கொடுத்தான். அசந்து போயிட்டேன்! ‘எங்க அடக்க விலையிலே கொஞ்சம் லாபம் வச்சுக்கிட்டேன். ஒண்ணு நாலு ரூபாதான் ஆகுது. இந்தா மீதம் பத்து ரூபா’ன்னு நாப்பது ரூபாய் மட்டும் வாங்கிக்கிட்டேன். அவனுக்கு மகிழ்ச்சி தாங்கல. அப்பைக்கப்போ வருவான். எதிர்காலத்திலே இவன் பெரிய ஆளா வரப்போறான்!”
நண்பர் மனம் நெகிழ்ந்து சொன்னதைக்கேட்டு எனக்குத் தோன்றியது இதுதான்!

‘அளவற்ற துன்பம், அளப்பரிய ஆற்றலைப் பரிசாகத் தரும் போலும்!’

- உத்தமசோழன்
ஜூன் 2014 'என் வாசலின் வழியே' பகுதியில் வெளிவந்தது

Wednesday, 9 July 2014

‘கைப்பிடிக்குள் சர்க்கரை’



செங்கல் சூளைத் தொழிலாளியாக இருந்த அட்டைப்பட நாயகனுக்கு பத்து ஆண்டுகளாக பார்வை இல்லை. அது முதல் தனது கணவனை பராமரித்து வருபவர், இவர் மனைவி இந்துமதி.

‘இன்னைக்கு கண்டிப்பா தாடி மீசை எடுத்தாகணும்-!’ என்று பிடிவாதம் பிடித்த கணவனின் கரத்தைப் பிடித்து சலூனுக்கு அழைத்து வருகையில் எடுக்கப்படம் புகைப்படம் இது.

அவர்களைக் குறுக்கிட்டு உரையாடியபோது,

“அவரு பேரு என்னம்மா?”

“சர்க்கரை!” என்றார் அவரே.

“நெசத்துலயும் உன்கிட்ட சர்க்கரையா இருக்காராம்மா இவரு?”

“எங்க? வெயில் தணிஞ்சு போகலாம்னா, இந்த 3 மணி வெயில்ல போயே ஆகணும்னு பிடிவாதம் பிடிக்கிறாரு. இப்படித்தான்!” என்று சிரித்தார்.

தொடர்ந்து ஒரு குழந்தையைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்வதைப் போல், தன் கணவனை அழைத்துச் சென்றார், அந்தத் தாய்!

Wednesday, 29 January 2014

தீயும், தியாகமும் | என் வாசலின் வழியே!

28.12.2013 சனிக்கிழமை அதிகாலை 3.35 மணியளவில் பெங்களூரு நாந்தேட் எக்ஸ்பிரஸ், பி&1 குளிர்சாதனப் பெட்டியில் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. இது நடந்தது ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தின் ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம் அருகே.

தீப்பிடித்த அந்த பெட்டியில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள், நிலைமை உணர்ந்து உயிர் தப்பிக்க யத்தனிப்பதற்குள்ளாகவே அந்தக் கொடுமைக்காரத் தீ, 26 மனித உயிர்களை அசுர வேகத்தில் தின்று தீர்த்துவிட்டது. அந்த இரக்கமற்ற தீ தின்று முடித்தவர்களில், ஏதுமறியாத இரண்டு குழந்தைகளும் அடக்கம்.

போகிற போக்கில் 2013ஆம் ஆண்டு, நமக்குக் கொடுத்துவிட்டுப் போன இந்தத் துயரச் செய்தியைத் தொலைக்காட்சிகளில் பார்த்தபோதும், செய்தித்தாள்களில் படித்தபோதும் நம் நெஞ்சமெல்லாம் பதறித் துடித்தது.

இத்தனைத் துயரத்திலும் நாம் கட்டியணைத்துப் பாராட்ட வேண்டிய ஒருவர் உண்டென்றால், அவர் அந்த விரைவு வண்டியின் ஓட்டுநர். தீ விபத்து ஏற்பட்டது அறிந்ததும் உடனடியாக ‘கொத செருவூ’ ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தினார். உடனே தீப்பிடித்த பெட்டி, மற்ற பெட்டிகளிடமிருந்து துண்டிக்கப்பட வழிவகுத்தார். இல்லையெனில், மேலும் பல நூறு உயிர்கள் பலியாகியிருக்கும்.

அவரைவிட பாராட்ட வார்த்தைகளே கிடைக்காத தீரம் மிக்க தியாகிகள் இருவர் அந்தத் துயர நிகழ்ச்சியில் போராடியிருக்கிறார்கள்.

அந்தத் தீ விபத்தில் தனது மனைவி, மாமனார் இருவரையும் பறிகொடுத்த நிலையிலும், உடன் வந்த பயணிகள் 20 பேரைத் தனது உயிரைத் துச்சமெனக் கருதித் தீயுடன் போராடி மீட்டிருக்கிறார் ஒருவர். அவரது பெயர் சரண். பெங்களூரைச் சேர்ந்தவர்.

அதேபோல், இன்னொருவர் கழிவறைக் கதவை உடைத்து தீயின் வாயிலிருந்து மூன்று உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார். இதில் கொடுமை என்னவென்றால் இவரது மனைவியும், மாமனாரும் அதே தீ விபத்தில் பலியாகி விட்டனர். அவரது பெயர் சரத்.

சொந்த இழப்பைத் தாங்கிக்கொண்டு மற்றவர் உயிர்களைக் காப்பாற்றிய இந்த வீரத் தியாகிகளை என்ன சொல்லி எப்படிப் பாராட்டலாம்? பாராட்டுவதோடு நின்றுவிடலாமா? அல்லது அவர்களைப் போல் நாம் ஒவ்வொருவரும் மாற முயற்சிக்கலாமா? மாறுவோம்!

நல்ல மக்கள் வாழும் நாடுதானே உண்மையான குடியரசாக இருக்க முடியும்!

 -  உத்தமசோழன்
கிழக்கு வாசல் உதயம் ஜனவரி 2014 இதழில்

Thursday, 26 December 2013

கடவுள் விட்ட வழி

பள்ளிக்கூடத்தில் ஏழாம்  வகுப்பு ‘பி’ பிரிவு. புகைப்படத்தில் முழங்கை வரை தொங்கும் தொளதொளா  சட்டையும், முழங்காலுக்கு கீழேயும் நீளும் அரை டிராயருமாய்க் காட்சியளிக்கும் என்னுடைய காஸ்ட்யூம் டிசைனர் எங்கள் ஊர் டெய்லர்தான்.

எனது வகுப்பறையில்  ஏனைய  மாணவர்கள் கச்சிதமாக உடம்போடு பொருந்தும் சட்டை டிராயருடன் காட்சியளித்தபோது  என்னை மட்டும் ஒரு கேலிச்சித்திரமாக ஆக்கிவிட்டிருந்தார் எங்கள் ஆஸ்தான டெய்லர்.

அப்பாவே ஒருமுறை தாங்கிக் கொள்ள முடியாமல் கேட்டே விட்டார்.

“ரொம்ப லூசா தச்சிட்டீங்க போலிருக்கே!”

“வளர்ற பையன் தானே சார்!”

'என்னது! அந்த சட்டை டிராயரை நான் வளர்ந்து பெரியவன் ஆனபிறகும் போட்டுக் கொள்ள வேண்டுமா என்ன!' எனக்கு கோபம் கோபமாக வந்தது!

டெய்லரின் சுபாவம் விசித்திரமாக இருக்கும். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது  என்று பார்க்க விரும்பாததுபோல் குனிந்து தைத்துக் கொண்டே இருப்பார்!

தெரு வழியே சர்க்கஸ் வண்டி போகும். கல்யாண ஊர்வலம் போகும். பட்டாசு அதிரும். தாரைத் தப்பட்டையுமாய் இறுதி ஊர்வலமும் போகும். ம்கூம்! டெய்லர் நிமிர்ந்தே பார்க்க மாட்டார்!

சாயங்கால வேளை களில் அவர் மனைவியும், பெண்களும் தட்டு நிறைய காராசேவு வாங்கி வைத்துக் கொண்டு கூஜா நிறைய காபி வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள்.

அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி விட்டது. எனக்கு ஒரு வகையில் சந்தோஷம். அப்பாடா! இந்த டெய்லரிடமிருந்து விடுதலை!

ஒரு வகையில் வருத்தம். குனிந்தபடி தைக்கும் அந்த டெய்லரையும், காரா சேவு சாப்பிடும் அவர் பெண்களையும் காலம் என்ன செய்திருக்கும்?

- கோபாலி
'கிழக்கு வாசல் உதயம்' ஆகஸ்ட் 2013 இதழில்.